இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் கேரளா சென்றார்
1 min readA warm welcome to Kerala Chief Minister M.K.Stalin
1.10.2022
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரத்திற்கு இன்று சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின்
கேரளாவில் சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 30-ந் தேதி (நேற்று) முதல் இம்மாதம் 3-ந் தேதிவரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு அங்கமாக, ‘கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் கேரள மாநில வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை மந்திரி கே.ராஜன் சால்வை அணிவித்து வரவேற்றனர். கேரள மாநில உணவு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மந்திரி ஜி.ஆர்.அணில், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். அந்த கருத்தரங்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் முக்கிய உரை ஆற்றுகின்றனர். எனவே கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.