விபத்தில் நண்பர் பலியானதால் உயிர் தப்பிய வாலிபர் தற்கொலை
1 min readA teenager committed suicide after his friend died in an accident
13.11.2022
விபத்தில் நண்பர் பலியானதால் உயிர் தப்பிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் பலி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் சீனிவாசன்(வயது 20). பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த இவர், நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தனது நண்பர் பிரபு(20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செஞ்சியில் இருந்து அங்கராயநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை பிரபு ஓட்டினார்.
சீனிவாசன் பின்னால் அமர்ந்து இருந்தார். அங்கராயநல்லூர் அருகே சென்றபோது எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சீனிவாசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தற்கொலை
காயம் அடைந்த பிரபு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு விபத்தில் சீனிவாசன் பலியானதை அறிந்த பிரபு தன்னுடன் வந்த நண்பனுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி விரக்தியடைந்தார். இதில் மனமுடைந்த அவர் கூர்மையான இரும்பு ஆயுதத்தால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றி அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிரபு, சிகிச்சை முடிந்து இரவு வீடு திரும்பினார். ஆனால் தனது ஆருயிர் நண்பர் சீனிவாசன் விபத்தில் பலியானதை அறிந்து மன வேதனை அடைந்த பிரபு தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இரவு 11 மணியளவில் பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் வீட்டில் அயா்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது படுக்கையில் இருந்து எழுந்த பிரபு வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் நண்பர் பலியானதால் உயிர் தப்பிய வாலிபர் 2-வது முறை முயற்சியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் எம்.ஜி.ஆர்.நகர் பகுதிமக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.