பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சுக்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டார்
1 min readBaba Ramdev Apologizes For Controversial Speech About Women
28/11/2022
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டார்.
பாபா ராம்தேவ்
மராட்டிய மாநிலம் தானேயில் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் நிறுவனம் சார்பில் பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் யோகா குரு பாபா ராம்தேவ், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி., துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசும் போது, ” பெண்கள் சேலையில் நன்றாக இருப்பார்கள். சல்வாரில் மிகவும் நன்றாக இருப்பார்கள். அவர்கள் எதுவும் அணியவில்லை என்றாலும் கூட நன்றாக இருப்பார்கள் என்பது எனது கருத்து. ” என்றார்.
போராட்டம்
அவரது பேச்சு மராட்டியத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநில பெண்கள் ஆணையம் பாபா
ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்தநிலையில் அந்த நோட்டீசுக்கு பதில் அளித்து அவர் மாநில பெண்கள் ஆணைய தலைவர் ரூபாலி சகான்கருக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மன்னிப்பு
தானேயில் நடந்த நிகழ்ச்சி பெண்களுக்காக நடத்தப்பட்டது. எனது ஒரு மணி நேர பேச்சை திரித்து தவறான நோக்கத்துடன் சில வினாடி வீடியோவாக வெளியிட்டுள்ளனர். தாய், தாய் பலத்தின் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. நான் சாதாரணமாக ஆடை குறித்து தான் பேசினேன். அது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மிகுந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். யாருக்கும் வேதனையை அளித்து இருந்தால் அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.