பாரதியாரின் குடும்பத்தினருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
1 min read
Union Minister Jaishankar meets Bharathiyar’s family
12.12.2022
பாரதியாரின் குடும்பத்தினரை மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்தார்.
பாரதியார் குடும்பம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் காசியில் வசிக்கும் பாரதியாரின் குடும்பத்தினரை வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் இன்று சந்தித்துப் பேசினார்.
அதுகுறித்து புகைப்படத்துடன் டுவிட்டரில் ஜெய்சங்கர் வெளியிட்ட செய்தியில், ‘மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளில் காசியில் வசிக்கும் அவரது குடும்பத்தினரை சந்தித்துப் பேசும் வாய்ப்பை பெற்றேன். பாரதியாரின் மருமகன் கே.வி.கிருஷ்ணனின் ஆசீர்வாதங்களையும், ஊக்கத்தையும் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சங்கமம்
கடந்த மாதம் 19-ந் தேதி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி, ‘தமிழகத்தைச் சேர்ந்த மாபெரும் மனிதரும், மகத்தான கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியார், காசியில் நீண்டகாலம் வசித்தார், இங்கு பயின்றார்.
பாரதியார் தனது கம்பீரமான மீசையை காசியில்தான் வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அவரது பெயரில் ஒரு இருக்கையை நிறுவியதன் மூலம், காசி இந்து பல்கலைக்கழகம் தனது பெருமையை உயர்த்திக் கொண்டுள்ளது’ என்று கூறினார். பாரதியாரின் குடும்பத்தினரை சந்தித்தபிறகு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.