5 சிறுமிகளை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 7 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை
1 min read
Life imprisonment for 7 persons who sexually assaulted 5 girls
22.12.2022
5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
கொத்தடிமைகள்
புதுச்சேரி புதுச்சேரியை அருகே கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 53). இவர் கோர்க்காடு ஏரிக்கரையில் வாத்துப் பண்ணை நடத்தி வந்தார். இந்த பண்ணையை கவனித்துக் கொள்ளவும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்ட வேலைகளுக்கு அனுப்பவும் ஆட்களை வைத்து இருந்தார்.
இதற்காக தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பணம் கொடுத்து சிறுமிகள் உள்பட பலரை கொத்தடிமையாக அழைத்து வந்து இதுபோன்ற வேலைகளில் கன்னியப்பன் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
இவர்களில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்த 5 சிறுமிகளும் அடங்குவார்கள்.
பாலியல் கொடுமை
கடந்த 2020 ஆம் ஆண்டு கொத்தடிமைகளாக சிறுமிகளை ஈடுபடுத்தி வந்ததாக கிடைத்த தகவலையடுத்து, புதுச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு குழுவினர் அப்பகுதிக்கு சென்று சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில், வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காட்டில் வீட்டில் அடைத்து வைத்து பண்ணை தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.
இதையடுத்து குழந்தைகள் நல காப்பக நிர்வாகிகள் வில்லியனூரை அடுத்த கோர்க்காடுக்கு சென்று சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது குறித்து ரகசியமாக விசாரித்தனர். இதில் அந்த சிறுமிகள் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் உதவியுடன் சென்று அந்த சிறுமிகளை குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டு புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில் ரூ.3 ஆயிரத்தை பெற்றோரிடம் கொடுத்து தங்களை கொத்தடிமைகளாக வாத்து மேய்க்க வைத்து இருந்ததாகவும், பண்ணையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தனர். மேலும் பண்ணையில் உள்ள அறையில் அந்த சிறுமிகளுக்கு கன்னியப்பன் உள்பட பலர் கஞ்சா, மது, போதை பொருட்களை கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் தெரிவித்தனர். மேலும் சிறுமிகளை கட்டி வைத்து சிறுவர்கள் உள்பட பலர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன் முடிவில் 5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமிகள் அடையாளம் காட்டியதன்படி கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த வாத்துப்பண்ணை உரிமையாளர் கன்னியப்பன் (53), அவரது மகன் ராஜ்குமார் (27), உறவினர் பசுபதி, அய்யனார் (23) மற்றும் ஒரு சிறார் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி செல்வநாதன், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக வாத்துப்பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், கன்னியப்பன் மனைவி சுபாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், காத்தவராயன் என்பவருக்கு ஐந்து வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு ரூ.7 லட்சமும் மற்ற 4 சிறுமிகளுக்கு 5 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி செல்வராகவன் தீர்ப்பு அளித்துள்ளார். இந்த வழக்கில் ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்ட நிலையில், சிறார் ஒருவர் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.