கடலூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி
1 min read5 killed in Cuddalore accident
3.1.2023
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் நின்று கொண்டிருந்த கார் மீது மணல் லாரி மோதியது. இந்த பயங்கர விபத்தில் அப்பளம் போல் கார் நொறுங்கியது. காரில் பயணம் செய்த 2 பெண்கள், 2 சிறார்கள் மற்றும் ஒரு ஆண் உள்பட 5 பேர் பலியாகினர். அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்து
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து எப்போதும் அதிகமாக இருக்கும்.
சென்னையை நோக்கி வரும் தனியார் ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள், சரக்கு வாகனங்கள், கார்கள் என இரவு நேரத்திலும் அணி வகுத்து செல்வதைக் காண முடியும். நான்கு வழிச்சலையாக உள்ள இந்த சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சலையை விரிவு படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் இந்த சாலையில் அவ்வப்போது விபத்துக்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று நள்ளிரவு 2 மணியளவில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்துள்ள அய்யனார் பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்று கொண்டிருந்த கார் மீது பின்னால் அதிவேகத்தில் வந்த மணல் லாரி மோதியது.
5 பேர் சாவு
இதில் முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய கார், இரு லாரிகளுக்கும் இடையே சிக்கி அப்பளம் போல நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்தை பார்த்த சக வாகன ஓட்டிகள் பதறியடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் மற்றும் தீ அணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காரில் இருந்த 5 பேரையும் போலீசார் மீட்டனர். 2 பெண்கள் மற்றும் 2 சிறார்கள், ஆண் ஒருவர் என 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். காரில் இருந்த ஆர்.சி புக்கை வைத்து விபத்தில் சிக்கியவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியதற்கான ரசீதும் காரில் இருந்ததால் இந்த ரசீதை வைத்து விபத்தில் சிக்கியவர்களின் விவரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
==
கடலூர் அருகே லாரிகள்
கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 2 தனியார் பேருந்துகள், 2 லாரிகள் ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் சென்ற 2 பெண்கள், 2 சிறார்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் சிக்கிய உடல்களை நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.