நாகப்பட்டினம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
1 min readPirates attack-robbery on Nagapattinam fishermen
16.2.2023
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள தாக்குதல் நடத்தி ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மீன் மற்றும் வலைகளை பறித்துக்கொண்டு மீனவரின் விரல்களை துண்டித்து சென்றனர்.
மீனவர்கள்
நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது45). இவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 14ம் தேதி முருகனுடன் அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி(45), சந்துரு (21), மாதேஷ் (22), சிவபாலன் (20), ஆகாஷ் (22) ஆகிய 6 மீனவர்கள் நம்பியார் நகர் கடலில் இருந்து மீன்பிடிக்க பைபர் படகில் சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (15ம் தேதி) நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர் அப்போது 4 இலங்கை படகுகளில் வந்த 12 கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர்.
தாக்குதல்
இதில் 9 பேர் தங்களது கையில் வைத்திருந்த இரும்பு பைப், கத்தி, தடி ஆகிய ஆயுதங்களுடன் தமிழக மீனவர்களின் படகில் ஏறி தாக்கினர். இலங்கை கடற்கொள்ளையர்களின் கொலைவெறி தாக்குதலில் தமிழக மீனவர் முருகனின் இடது கையின் மூன்று விரல்கள் வெட்டப்பட்டது. பட்டாக்கத்தி, இரும்பு கம்பிகள், கட்டைகள் கொண்டு கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகில் இருந்த மீன், ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள், தூண்டில் வலைகள் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர். அதனை தொடர்ந்து சக மீனவர்களின் உதவியோடு தமிழக மீனவர்கள் புஷ்பவனம் கடற்கரைக்கு கரைவந்து சேர்ந்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். கை, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொண்டுவரப்பட்ட மீனவர்களுக்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றன். அங்கு நள்ளிரவில் குவிந்திருந்த மீனவ பெண்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் விரல்கள் வெட்டப்பட்ட மீனவர் முருகன் நாகையில் இருந்து கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 5 மீனவர்கள் நாகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே, இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்று நாகை மீனவர்கள் தெரிவித்தனர். பலத்த ஆயுதங்களுடன் கத்தி முனையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். எதிர்த்து பேசியதால் கடுமையாக தாக்கினார்கள் என்று வேதனையுடன் தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.மீனவரின் விரல்களை துண்டாடி இந்திய எல்லையில் அத்துமீறி புகுந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவ கிராமங்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கைது நடவடிக்கை மேற்கொள்வதும், இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் கடந்த 6 மாதகளாக ஓய்ந்திருந்தது இந் நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களை நாகை நகர் மன்ற தலைவர் மாரிமுத்து பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.