சபாநாயகரின் தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு-பேரணி
1 min read
Opposition boycott-rally at Speaker’s tea party
6.34.2023
கூட்டத்தொடரின் நிறைவில், சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர். அவர்கள் பாராளுமன்ற முதல் வாயிலில் பேரணி நடத்தினார்.
எதிர்க்கட்சிகள் அமளி
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் முடங்கின. கடைசி நாளான இன்று மக்களவையில் எந்த அலுவலும் நடைபெறவில்லை. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியைத் தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
கூட்டத்தொடரின் நிறைவில், சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தையும் எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர். மேலும், மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் வரை மூவர்ணக் கொடி பேரணி நடத்தினர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த இந்த பேரணியில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, ஆர்ஜேடி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். அனைவரும் மூவர்ணக் கொடியை ஏந்தி சென்றனர். பேரணி தொடங்குவதற்கு முன்பாக, பாராளுமன்ற முதல் வாயிலில் எம்.பி.க்கள் திரண்டிருந்தபோது சோனியா காந்தியும் தேசியக்கொடியுடன் பங்கேற்றார். பாஜக ஆட்சியில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.