பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: 24 போலீஸார் பணியிட மாற்றம்
1 min read
Teeth extraction case: 24 policemen transferred
12.5.2023
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்துறை உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 24 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் 4 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
அதன்படி விக்ரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வேதநாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் முருகேசன், காவலர்கள் விக்னேஷ், மணிகண்டன் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனிப்பிரிவு சிறப்பு காவலர் போகன் மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்டோர் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 24 பேரை மாவட்டத்தின் பிற காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.