தமிழகத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
1 min read
No one from Tamil Nadu lost their lives – Minister Udayanidhi Stalin’s interview
4.6.2023
தமிழகத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்று ஒடிசாவில் இருந்த திருப்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
ஒடிசா விபத்து
ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த 1175 பயணிகளில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த பலர் விபத்தில் சிக்கிய ரெயிலில் பயணம் செய்ததால், அவர்களுக்கு உதவும்பொருட்டு தமிழகத்தில் இருந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஒடிசா சென்றனர்.
அந்த குழுவினர் இன்று சென்னை திரும்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரெயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்றார். 8 பேர் குறித்த தகவல் இல்லாமல் இருந்த நிலையில், 3 பேர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மற்ற 5 பேரும் நலமுடன் உள்ளதாக, அவர்களுடன் உடன் பயணித்த நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மே.வங்காளத்தில் 62 பேர் பலி
இந்த விபத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 62 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். விபத்தில் சிக்கிய 56 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்; மேலும் 279 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்னும் 182 பேர் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.