ஒடிசா ரெயில் விபத்துக்கு மின்னணு இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றமே மூலகாரணம்: ரெயில்வே மந்திரி தகவல்
1 min read
Odisha train accident blamed on change in electronic interlocking: Railway minister informs
4.6.2023
ஒடிசா ரெயில் விபத்துக்கு மின்னணு இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றமே மூலகாரணம் என்று ரெயில்வே மந்திரி கூறியுள்ளார். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் லூப் லைனுக்கு சென்று சரக்கு ரெயிலின் மீது மோதி உள்ளது. இன்டர்லாக் மாற்றம் எப்படி நடந்தது? என்பது விசாரணையில் தெரியவரும் என ரெயில்வே மந்திரி கூறினார்.
ஒடிசா ரெயில் விபத்து
ஒடிசா மாநிலம் பாலசோரில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தததாக தலைமைச் செயலாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 1175 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தலைமை செயலாளர் கூறினார். ரெயில் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயிலின் மீது மோதியதால் இந்த பேரிழிவு ஏற்பட்டிருக்கிறது. விபத்து நடந்த இடத்தில் ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விபத்துக்கான மூலகாரணம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். மின்னணு இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் விபத்து நடந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த மாற்றத்திற்கு யார் காரணம், எப்படி நடந்தது? என்பது விசாரணையில் தெரியவரும் எனவும் ரெயில்வே மந்திரி கூறினார்.
கவாச் அமைப்பு
ரெயில் டிரைவர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் கவாச் அமைப்பு இந்த ரெயில்களில் நிறுவப்படவில்லை. இந்த அமைப்பு இருந்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விபத்துக்கும் கவாச்சிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ரெயில்வே மந்திரி குறிப்பிட்டார்.