ஒடிசா ரெயில் விபத்து பற்றி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்
1 min read
PIL filed in Supreme Court regarding Odisha train accident
4.6.2023
ஒடிசா ரெயில் விபத்து பற்றி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ரெயில் விபத்து
கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் சென்ற போது நடந்த இந்த விபத்தால் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்தன. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 275 என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே ரெயில் விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டது என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
வழக்கு
இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே துறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதி, ரெயில்வே நிபுணர்கள் அடங்கிய குழு மூலம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ரெயில் பயணங்களை பாதுகாப்பதாக மாற்றும் வகையில் உரிய ஆலோசனை வழங்கும் வகையில் ஆணையம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விஷால் திவாரி பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.