கடையம் பத்திரகாளி அம்மன் கோவிலில் பக்தர்களின் முயற்சியால் ரூ.2 கோடியில் ராஜகோபுரத்துடன் திருப்பணி
1 min readAt Kadayam Pathirakali Amman temple, the devotees have restored the Rajagopuram at a cost of Rs.2 crore
10.6.2023
கடையம் பத்திரகாளி அம்மன் கோவிலில் பக்தர்களின் முயற்சியால் ரூ.2 கோடியில் திருப்பணி நடந்து வருகிறது. அங்கு ராஜகோபுரம் அமைக்கப்படுகிறது.
பத்திரகாளி அம்மன் கோவில்
தென்காசி மாவட்டம் கடையத்தில் பிரசித்திப்பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தைமாதம் எட்டுநாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஊருக்குள் கல்லினால் கட்டப்பட்ட கோவிலில்தான் இந்த திருவிழா நடைபெறும். இதன் மூலக்கோவில் ஊருக்கு மேற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் வில்வ வனநாதர் உடனுறை நித்திய கல்யாணி அம்மன்கோவிலுக்கு கீழ்புறம் வடபத்து குளத்தின் கரையில் வடக்கு நோக்கி உள்ளது. திருவிழாவின் முதல்நாள் இங்கிருந்துதான் அம்மன் புறப்பாடு நடைபெறும். எட்டாவது நாள் ஊரில் இருந்து பக்தர்கள் தோளில் சுமந்து வரும் தேர் சப்பரம் இங்கு வந்து சுமார் 50 அடி உயர பாறையில் ஏறும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும்.
இங்கு தமிழ்மாதம் கடைசி செவ்வாய் அன்று சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும். 2009ம் ஆண்டுக்கு பிறகு தொடங்கிய இந்த அன்னதானத்தை புளி கணேசன் அவர்கள் தலைமையில் நடந்தது. சிலமாதங்களுக்கு பின்னர் கீழக்கடையம் பக்த பேரவை சார்பாக அன்னதானம் நடந்து வருகிறது.
திருப்பணி
இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1996 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் பீம்சிங் அவர்கள் தலைமையில் நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இப்போது கும்பாபிஷேகம் நடந்த இந்து அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. அதனால் பொதுமக்கள் சார்பில் பல்வேறு பணிகளை செய்ய முடிவு செய்துள்ளனர். நாளுக்குநாள் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சுற்றிவரும் வெளி பிரகாரப் பாதையை அகலப்படுத்த வேண்டியுள்ளது. எனவே கோவிலுக்கு கீழ்புறம் சுமார் 15 அடி ஆழம் உள்ள பகுதியை உயர்த்த வேண்டியது இருக்கிறது. அதில் வாய்க்கால் செல்வதால் அதை கீழ்புறமாக திருப்பி விட வேண்டும்.
மேலும் அந்த காலி இடத்தில் மண்டபம் ஒன்றையும் கட்டி அதில் கோவில் சமான்களை வைக்க தனி அறையும் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தென்கிழக்குப் பகுதியில் சமையல் செய்ய வசதி செய்யப்படும். மேலும் கோவிலில் முடிகாணிக்கை செலுத்துபவர்கள் குளிக்கவும் வசதி செய்யப்பட உள்ளது. தண்ணீர் வசதிக்காக புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை தொட்டியும் அமைக்கப்படுகிறது-. பொதுமக்கள் திருமண நிகழ்ச்சியை கோவில் நடத்த இது வசதியாக இருக்கும்.
ராஜகோபுரம்
இது தவிர முக்கியமான திருப்பணியாக ஐந்து நிலை ராஜகோபுரம் ஒன்றும் கட்டப்படுகிறது. தற்போதுள்ள ஆர்ச் பகுதியில் அந்த கோபுரம் அமைய உள்ளது. அந்த கோபுரத்தில் வெகு தொலையில் இருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் மின்விளக்கால் சூலாயுதம் ஒன்றும் அமைக்கப்படுகிறது. கோபுரம் அருகே உள்பகுதியில் ஒருபுறம் விநாயகர் சன்னதியும், இன்னொருபுறம் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதியும் அமைக்கப்படுகிறது. தற்போது அரசமரத்தடியில் இருக்கும் விநாயகர் புதிதாக கட்டப்படும் சன்னதிக்கு மாற்றப்படுவார். வள்ளி&தெய்வானையுடன் நின்ற கோலத்திலர் முருகன் சிலை வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படும்.
மேலும் தற்போது கோவில் உள்புறம் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது. இது ஆகம விதிக்கு புறம்பானது என்பதால் அவை அனைத்தும் அப்புறப்படுத்தப்படும். மேலும் மூலஸ்தானம், முன்மண்படம் உள்பிரகாரம் ஆகியவற்றில் கருங்கல் பதிக்கப்படுகிறது.
இத்தனை வேலைகளுக்கும் ரூ.2 கோடிக்கு மேல் செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. தற்போது திருப்பணி தொடங்கி உள்ளது. பக்தர்கள் சிலர் உதவியும் வருகிறார்கள்.- மேலும் பணி துரிதமாக நடக்க பக்தர்கள், அன்பர்களின் உதவி தேவைப்படுகிறது. திருப்பணிக்குழு கமிட்டியை சேர்ந்த கண்ணன் என்ற ராமசாமி(சி.ஆர்.பி.எப்.) 94441 180521, ராமகிருஷ்ணன் 94420 75777
கஜேந்திரன் 94452 36598 ஆகியோரை தொடர்வு கொள்ளவும்.