கண்ணாயிரம் சந்தித்த காவிரிபிரச்சினை /நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min readCauvery problem faced by Kannayiram / comedy story / Tabasukumar
12.7.2023
கண்ணாயிரம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு குளிக்காமல் பாநாசத்துக்கு சுற்றுலாபஸ்சில் மற்றவர்களுடன் வந்துகொண்டிருந்தார். வழியில் அவருக்கு கடையத்தில் ரசிகர் மன்றம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் வெயில் அதிகமானதால் எலுமிச்சம் பழம் ஜுஸ் குடித்தார். பின்னர் தலையில் தேய்த்து குளிப்பதற்காக எலுமிச்சம் பழங்கள் வாங்கிக்கொண்டு புறப்பட தயாரானபோது இலக்கிய மன்றம் சார்பாக கண்ணாயிரத்துக்கு எலுமிச்சம் பழ மாலை அணிவிக்கப்பட்டது.
கண்ணாயிரம் திகைக்க..நகைச்சுவை திலகம் நீங்க..உங்களுக்கு கடையம் முத்தமிழ் கலா மன்றம் சார்பாக எலுமிச்சம் பழ மாலை அணிவிப்பதில் பெருமை படுகிறோம் என்று பாராட்டினர்.
கண்ணாயிரம் என்ன இங்கே இலக்கிய மன்றம் இருக்கா என்று கேட்க ஒரு முதியவர் என்ன அப்படி கேட்டுப்புட்டிய முத்துமணி, பாலன், இரவி தலைமையில் முத்தமிழ் கலாமன்றம் இருந்தது. நாடமெல்லாம் போட்டவ. இப்போக்கூட பாலன், சா.கண்ணன், கவி அதை நடத்திக்கிட்டுத்தான் இருக்காங்க.. அதுமட்டுமில்ல கலேஜ் வாத்தியார் எல்.எம்.நாராயணன் பாரதி மன்றம் வச்சி நூற்றாண்டுவிழா கொண்டாடுகிறார். பாதியார் மைத்துனிக்கு உதவித்தொகை வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்தாரு… தேசிய கவிஞர்…பாரதியார் வந்த பூமி இந்த கடையம் பூமி தெரியுமா..
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் என்று பாரதியார் பாடினாரே.. நினைவிருக்கா என்று கண்ணாயிரத்திடம் கேட்க.. கண்ணாயிரமோ..நினைவிருக்கு..ஆனா நீங்க சென்டு விலை ஐந்து லட்சமுல்லா சொல்லுறீங்க…அப்போ பாரதியார் பராசக்தியிடம்தான் காணி நிலம் வேண்டும் என்று கேட்கிறார் என்றார்.
பெரியவரோ..பாரதியார் காலத்திலே கடையத்திலே சென்டுவிலை கம்மிதான்..
இப்போதான் விலை கூடிப்போச்சு என்று சமாளித்தபடி வாங்க பாரதியார் சிலையை பார்த்துவிட்டு வருவோம் என்று அழைத்தார். பாரதியாருக்கு சிலை இருக்கா வாங்க பார்ப்போம் என்றபடி கண்ணாயிரம் நடக்க மற்றவர்களும் அவர் பின்னால் நடந்து செல்ல கூட்டம் அதிகமாகியது. கண்ணாயிரம் எலுமிச்சம்பழ மாலையை போட்டபடி வீர நடை நடந்து செல்ல..அவரது மனைவி பூங்கொடி எலுமிச்சம் பழமாலைக்கு பாதுகாப்பாக நடந்து வந்தார்.
பாரதியார் சிலை வந்ததும் திருவள்ளூவர் கழக தலைவர் சேதுராமலிங்கம், செயலாளர் கல்யாணி சிவகாசமிநாதன், நிர்வாகி கோபால் ஆகியோர் வரவேற்றனர். கண்ணாயிரம் கையில் மாலையை கொடுக்க அவர் பாரதியார் சிலைக்கு அணிவித்து வணங்க வாழ்த்து கோஷம் விண்ணைப்பிளந்தது. அப்போது அவர்கள் இந்த சிலையை சேவாலயா அமைப்பினர் வைத்ததாக கூறி பாரதியாரின் பெருமைகளை சொல்லி பாரதியார் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊர் கடையம் என்றும் பாரதியார் பலநாள் இங்கு இருந்திருக்கார் என்றும் என்று சொன்னவர் பாரதியாரின் பாடல்களின் மகத்துவத்தையும் எடுத்துவைத்தார்.
பாரதியார் பாடிய பாடல் என்று சொல்லி சிந்து நதியின் மிசை நிலவினிலே என்று பாட ஆரம்பிக்க..கண்ணாயகரம் குறுக்கிட்டு இந்த பாடல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடியது என்று வாதம் செய்ய பெரியவரோ திடுக்கிட்டு…ஆ..ஆமா..ஆமா..பாடலை எழுதினது பாரதியார்…சினிமாவில் பாடினது சிவாஜிகணேசன்..என்று சொல்ல கண்ணாயிரம்..ம் பெரியவரே வரலாறு முக்கியம்.நான் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தா இந்த பாடலைத்தான் பாடுவேன்..இப்ப பாடட்டுமா கேக்கியளா என்றபடி பாடத்தொடங்கினார்.
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே..
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்..
கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம் காவிரி..காவிரி காவிரி..என்று இழுக்க தொண்டை கரகரக்க..கண்ணாயிரம் தண்ணி தண்ணி என்று சைகையால் கேட்க காவிரி தண்ணீர் இங்கு கிடைக்காது என்று ஒருவர் சொல்ல ஒரு பெரியவர் ஒரு செம்பில் தாமிரபரணி தண்ணீர் கொடுத்தார். கண்ணாயிரம் வாங்கி குடித்துவிட்டு மீண்டும் பாடலைவிட்ட இடத்திலிருந்து தொடங்குவதாக நினைத்து காவிரி…காவிரி..காவிரி என்று தடுமாற.. ஒரு பெரியவர் அது வராது விடுங்க என்று பாட்டு போதும் என்று சோடா கொடுத்தார்.
கண்ணாயிரம் அதையும் வாங்கி குடித்துவிட்டு காவிரின்னு பாடுனதும் வாய் தகராறு ஆயிற்று என்று கண்ணாயிரம் சொல்ல அங்கிருந்தவர்கள் அதை புரிந்துகொண்டு..ஓ..ஓ..நீங்கள் அப்படிச்சொல்லுறீயளா….ஓ..ஓ என்ன தமாஷ் என்ன தமாஷ் என்று விழுவிழுந்து சிரிக்க.. இதைப்பார்த்த ஒரு சேவலயா நிர்வாகி சங்கிலி பூதத்தான் வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகுமுன்னு சொல்வாங்க.. நம்மையெல்லாம் சிரிக்கவைத்த கண்ணாயிரத்துக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம் என்க..கண்ணாயிரமோ..ஆ..எனக்கு ஊசின்னாலே அலர்ஜிங்க என்னால ஊசி போடமுடியாதுஎன்று சொல்ல.. மற்றவர்கள் சிரித்தபடி இந்த டாக்டர் பட்டம் வாங்கினா ஊசி போடமுடியாது…என்று சொல்ல சிரிப்பலை பொங்கியது. (தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.