கண்ணாயிரத்துக்கு பாட்டால்வந்த அடி/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min readA slap in the face to Kannayira/ comedy story/ Tabasukumar
19.17.2023
கண்ணாயிரம் குற்றாலத்திலிருந்து பாபாநாசம் செல்வதற்காக சுற்றுலாபஸ்சில் வந்தபோது வழியில் கடையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தனக்கு அணிவித்த எலுமிச்சம்பழ மாலையுடன் பஸ்சுக்கு திரும்பி வந்தார்.
கூட்டம் அவரை பின்தொடர்ந்து வர கண்ணாயிரம் ஏக உற்சாகத்தில் இருந்தார். எலுமிச்சம் பழ மாலை கனத்து கிடந்ததால் இதை போட்டுக்கிட்டு எவ்வளவு தூரம் நடப்பது என்று கண்ணாயிரம் யோசித்தார். திருஷ்டிக்காக லாரியின் முன் எலுமிச்சம் பழம் கட்டி தொங்கவிடுவார்களே..ஏன் சுற்றுலா பஸ் முன்னாலே கட்டி தொங்கவிடலாம் என்று யோசித்த கண்ணாயிரம் எலுமிச்சம்பழ மாலையை கழற்றி பஸ்சின் முன்னால் கட்டிவிட முயன்றார்.
இதைப் பார்த்த பூங்கொடி..ஏங்க என்ன பண்ணுறீங்க..எலுமிச்சம் பழமாலையை பஸ்சிலே கட்டாதீங்க..எங்கிட்ட கொடுங்க..நான் ஊரிலே போயி ஊறுகாய் போட்டுத்தர்ரேன் என்றார்.
கண்ணாயிரமும் சரி என்று சொல்லிவிட்டு என்தலையிலே அரக்கி தேய்க்க எலுமிச்சம்பழம் என்று கேட்க.. அது நீங்க கடையிலே வாங்கின எலுமிச்சம்பழம் இருக்கு.. அதைவச்சி தேய்ச்சிடலாம் என்று பூங்கொடி சொல்ல சரி சரி என்று கண்ணாயிரம் மகிழ்ச்சி அடைந்தார்.
அப்போது சுடிதார் சுதா மற்றும் இளைஞர்களும் எலுமிச்சம் பழங்கள் வாங்கிக்கொண்டு பஸ்சில் ஏறினார்கள்.
அதைப்பார்த்த கண்ணாயிரம்..ஆமா இவங்க தலையிலே அழுந்த தேய்க்க ஆளுக்கு எங்கேபோவாங்க.. எனக்கு என்மனைவி இருக்கா..அவா அழுந்த தேய்க்காளோ அரக்கி தேய்க்காளோ தெரியலை என்று முணங்கியபடி பஸ்சில் ஏறினார்.
பயில்வானும் இரண்டு எலுமிச்சம் பழம்வாங்கிக்கொண்டு பஸ்சில் பாய்ந்து ஏறியபடி.. என்ன எல்லோரும் பஸ்சில் ஏறியாச்சா.. பஸ் இனி பாபநாசத்திலேத்தான் நிக்கும்.. சரியா..ரைட்டு என்று குரல்கொடுக்க பஸ் நகர்ந்தது. இலக்கிய ஆர்வலர்கள் பொதுமக்கள் கையசைக்க கண்ணாயிரம் மகிழ்ச்சியுடன் கையைசைத்தவாறு புறப்பட்டார்.
பஸ் பொட்டல்புதூரை தாண்டி வயல்வெளி.. ஆழ்வார்குறிச்சியை அடுத்து இருபுறமும நெல் வயல்கள் என இனிமையான சூழலில் பசுமை படர்ந்த வழிகள் வழியாக…பச்சைகிளி போல் பறந்து சென்றது. கண்ணாயிரம் அந்த காட்சிகளை ரசித்தபடி இயற்கை என்னும் இளைய கன்னி என்று முணுமுணுத்தபடி வந்தார்.
உடனே சுடிதார் சுதா..சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு..தென்றலே உனக்கென்ன சொந்த வீடு என்ற பாடலை பாட.. அதைக்கேட்ட.. துபாய்க்காரர்.. ஆ.. உலகம்.. உலகம்.. உலகம்.. அழகு கலைகளின் சுரங்கம்.. என்று பாட்டுப்பாட பஸ்சில் ஒரே கலகலப்பு.
கண்ணாயிரம்..என்ன பாட்டுபாட என்று யோசித்தபடி இருக்க.. பயில்வானோ..காஷ்மீர் பியூட்டிபுள் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புள் காஷ்மீர்.. என்று பாட கண்ணாயிரமோ..ஏங்க.. இது காஷ்மீர் இல்ல…பாபாநாசம்..தெரியுதா.. பாட்டை மாத்திப்பாடுங்க என்று குரல் எழுப்பினார். கண்ணாயிரம் புதுபாடல் யோசித்து செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா..
அம்மம்மா…ஆனந்தம்..என்றுபாட…பயில்வான் கோபத்துடன்.. தப்பு..தப்பு.. இந்த பாடலை ஜீப்பிலேதான் பாடணும்..பஸ்சிலே பாடக்கூடாது என்று சொல்ல கண்ணாயிரம்.. ரொம்ப யோசித்துக் கொண்டிருக்கையில் சுடிதார் சுதா கடையம் தாழம்பூவுக்கு தனி மவுசு அதான் கண்ணாயிரம் இப்படி பாடுகிறார் என்றார்…
ஆமா… ஆமா.. அதான் பாடினேன்,,, அதையும் பாடக்கூடாதா..என்று கண்களை கசக்கினார்.
பஸ்குலுங்கி குலுங்கி செல்ல அனைவரும் கொல்லென்று சிரித்தார்கள்.
கண்ணாயிரம் விடவில்லை.இதயம் போகுதே என்னையே பிரிந்து காதல் இளம்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ என்று பாட பூங்கொடியோ ஆத்திரத்தில் கேட்குது கேட்குது..இதயம் நான் இங்கே இருக்கேன்..பிறகு எதுக்கு இதயம் போகுதேன்னு பாடுறீங்க.. யார் அந்த இதயம் என்று மடக்க.. கண்ணாயிரமோ..அட..பஸ்சிலே வருகிற ஒரு பாட்டுக்குபாடினேன்.. அதுக்காக இப்படியா என்று செல்லமாக சிணுங்க.. சரி பாடாம அப்படியே இருங்க என்று பூங்கொடி சத்தம் போட கண்ணாயிரம் அமைதியானார்.
அடுத்து சுடிதார்சுதா எழுந்து.. பார்த்த ஞாபகம் இல்லையோ..பருவநாடக தொல்லையோ..
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததோ இந்த நெஞ்சமோ என்று கண்ணாயிரத்தைப்பார்த்து பாட.. கண்ணாயிரம் சிக்கல் வருவதை உணர்ந்து பதுங்க.. பூங்கொடி கோபத்துடன் கண்ணாயிரம் கன்னத்தில் இடிக்க.. கண்ணாயிரம் எனக்கு ஒண்ணும் தெரியாது என்க.. பூங்கொடியோ.. ஏங்க.. ஏமாத்திருங்க.. வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ.. என்று பாடுகிறாள்.. நீங்க..என்னிடம் மறைச்சிட்டிங்க..உங்களைவிட மாட்டேன் என்று முதுகில் குத்த.. கண்ணாயிரமோ..அந்த பொண்ணை இதுக்கு முன்னாலே பாத்ததே இல்லை என்று சொல்ல அப்போ பின்னாலே பாத்தியளான்னு பூங்கொடி கிடுக்குப்பிடி போட கண்ணாயிரம் தப்பிக்கமுடியாமல் ஆ..ஆ..என்று கத்தினார்.
-வே.தபசுக்குமார், புதுவை