பிரதமர் மோடியுடன் நாளை மறுநாள் இலங்கை அதிபர் சந்திப்பு
1 min read
The Sri Lankan President will meet Prime Minister Modi the day after tomorrow
19.7.2023
பிரதமர் மோடியுடன் நாளை இலங்கை அதிபர் ரணில் விக்கிரசிங்கே சந்திக்கிறார்.
இலங்கை
இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகி நாட்டை விட்டு தப்பிச்சென்றார். தொடர்ந்து, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டை மீட்க இலங்கை இந்திய அரசிடம் உதவிகேட்டது.
இதனால் இலங்கை அரசுக்கு இந்தியா பல கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது. எரிபொருள், உணவுப்பொருள் என பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கியது. தற்போது இலங்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இன்று சந்திப்பு
இந்த நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக நாளை (வியாழக்கிழமை) இந்தியா வர உள்ளார்.
நாளை மறுநாள் அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு மேம்பாடு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளனர். அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, இலங்கை ஆகிய 2 நாடுகளும் தூதரக உறவுகளை தொடங்கியதன் 75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் இந்த சுற்றுப்பயணம் அமைகிறது. தொடர்ந்து அவர் 21-ந் தேதி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பு 2 நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை வலுப்படுத்தும், பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்து மேம்படுத்தவும் உதவும் வகையில் அமையும் என கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு மட்டும் இந்தியா இலங்கைக்கு சுமார் 4 பில்லியன் டாலர்களை வழங்கி உள்ளது. இந்தியாவின் ஆதரவு காரணமாகவே, இலங்கை சர்வதேச நிதி ஆணையத்திடமிருந்து 2.9 பில்லியன் நிதியைப் பெற முடிந்தது, அதற்காக ஏற்கனவே இலங்கை அரசு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது.
இந்நிலையில் சமீபத்தில் கொழும்பில் நடந்த இந்திய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் இந்திய நாணயம் குறித்து அவர் பேசியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. இது இந்திய பெருங்கடலில் உள்ள நாடுகளையும் சேர்த்து வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்கிறது. மேலும், அமெரிக்க டாலரை போல இந்தியாவின் ரூபாயயை பொது நாணயமாக பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இது இந்தியாவின் அந்நிய செலாவணியை மேம்படுத்த உதவும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இந்த சூழலில் பிரதமர் மோடியுடன் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.