தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,705 பேர் உறுப்பு தானம்-அமைச்சர் தகவல்
1 min read
1,705 people donated organs in 15 years in Tamil Nadu
1.9.2023
தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,705 பேர் உறுப்பு தானம் செய்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
கலைஞர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் 2008-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ந் தேதி அன்று தமிழக அரசின் மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் 2015-ம் ஆண்டு தமிழக அரசின் மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் , தமிழ் நாடு உறுப்பு மாற்று ஆணையமாக உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏற்கனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. மேலும் திருநெல்வேலி மதுரை மற்றும் கோயம்புத்தூர் மருத்து வக்கல்லூரி மருத்துவமனைகளிலும் உரிமம் வழங்கப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட உள்ளது.
உடல் உறுப்பு தானம்
இந்த ஆணையம் தொடங்கப்பட்ட 15 ஆண்டுகளில் மொத்த உறுப்பு தானம் செய்தவர்கள் எண்ணிக்கை-1,705 பேர். இதில், இதயம்-786, நுரையிரல்-801, கல்லீரல்-1565, சிறுநீரகம்-3046, கணையம்-37, சிறுகுடல்-6, வயிறு-2, கைகள்-4 என உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 6247 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர 2,500 கண்களும் தானமாக பெறப்பட்டு உள்ளது.
தமிழ் நாட்டில் மட்டும் தான் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 22 லட்சம் ருபாய் வரையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது .
இந்த திட்டத்தின் மூலம் 2014 முதல் தற்போது வரை மட்டும் 370 நோயாளிகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர். நோயாளிகளின் பதிவு மற்றும் உடல் உறுப்புகளை ஒதுக்கீடு செய்வதற்காக விடியல் என்ற தானியங்கி இணையதளம் மற்றும் செயலியை இந்தியாவிலேயே முதன் முறையாக 13.8.2021 அன்று தமிழக அரசு தொடங்கி வைத்தது.
இந்த செயலியினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெளிப்படையாகவும் மூப்பின் அடிப்படையிலும் நோயாளிகளுக்கு உறுப்பு ஒதுக்கீட்டை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.