அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்தது அமலாக்கத்துறை
1 min read
Minister Senthil Balaji was taken into custody by the Enforcement Directorate
7.8.2023
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் என செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தலாம் எனவும் தெரிவித்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், செந்தில் பாலாஜியை வரும் 12ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கும் நடைமுறையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடங்கினர். நீதிமன்ற உத்தரவு இ-மெயில் மூலம் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ள புழல் சிறை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இன்று இரவு புழல் சிறைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தனர். சிறையில் இருந்து சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வருகின்றனர். அங்கு வைத்து நாளை காலை முதல் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.