வள்ளியூரில் யூடியூப் பார்த்து பெட்ரோல் வெடிகுண்டு தயாரித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது
1 min read
3 people, including a boy who watched YouTube and made a petrol bomb, were arrested in Valliyur
8.8.2023
வள்ளியூரில் யூடியூப் பார்த்து பெட்ரோல் வெடிகுண்டு தயாரித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல் குண்டு
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த 3 பேர் சமூக வலைதளமான யூ-டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் அதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவாக பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோவில் பெட்ரோல் குண்டுகளை சுவற்றில் வீசி அவர்கள் வீசி ஒத்திகை பார்ப்பது போல் காட்சிகள் பதிவிடப்பட்டிருந்தது.
மேலும் பின்னணியில் ஒரு பாடல் அதில் ஒலிக்க, கையில் அரிவாளுடன் 3 பேரும் நடனம் ஆடிய காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
இது தொடர்பாக வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் வள்ளியூர் கீழ தெருவை சேர்ந்த இசக்கியப்பன் (25), சரவணன் (19) என்பதும் மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவனுக்கு தொடர்பு இருப்பதும், அவன் தப்பி ஓடியதும் தெரியவந்தது. அந்த சிறுவனை போலீசார் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயார் செய்தது தெரியவந்தது. பின்னர் தாங்கள் தயாரித்த பெட்ரோல் குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அப்போது தான் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களது செல்போனில் வேறு ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்