மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு- பாராளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு
1 min read
End of Monsoon Session- Both Houses of Parliament adjourned indefinitely
11.8.2023
மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. பாராளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற கூட்டம்
பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்ட தொடரில் மணிப்பூர் கலவர பிரச்சினை முக்கிய அம்சமாக எதிரொலித்தது.
கூட்டம் தொடங்கிய நாள் முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தது வரை எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற 2 அவைகளையுமே ஸ்தம்பிக்க செய்தன. எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானம் மீதான விவாதம் கடந்த 8-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருத்துக்கள் தெரிவித்து பேசிய நிலையில் கடந்த வியாழக்கிழமை பிரதமர் மோடி பதில் அளித்தார். சுமார் இரண்டரை மணிநேரம் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசியதும், தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததும் இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாகும். வியாழக்கிழமையுடன் 16 நாள் நிறைவு பெற்று இன்று 17-வது நாளாக பாராளுமன்ற இரு அவைகளும் கூடின.
இன்றும் மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அமளிக்கு மத்தியில் இந்திய தண்டனை சட்டம் தொடர்பான 3 முக்கிய சட்ட திருத்த மசோதாக்களை உள்துறை மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார். அதன்பின்னர், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.