செந்தில் பாலாஜிக்கு 25-ந் தேதி வரை நீதிமன்ற காவல்: மேலும் 5 நாட்கள் விசாரிக்க அமலாக்கத் துறை கோரிக்கை
1 min read
Court remands Senthil Balaji till 25th: Enforcement department requests 5 more days to investigate
12.8.2023
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த, 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்பதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.
அமலாக்கத்துறை
இந்தத் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்தும் ஆக.7-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அன்று இரவே புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கினா்.
இந்நிலையில், 12-ம் தேதியான இன்றுடன் செந்தில் பாலாஜியின் காவல் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். மேலும் 5 நாட்கள் நடத்திய விசாரணை குறித்த குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
மேலும் 5 நாட்கள்
நீதிமன்ற காவல் முடிந்து சனிக்கிழமை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிபதி அல்லியின் அறையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதியின் அறையில், அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
நீதிபதியின் அறையில் இந்த விசாரணை நடைபெற்றது. அப்போது, அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மேலும் 5 நாட்கள் விசாரணை நடத்த அனுமதிக்க கோரிய மனுவுடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜராகியிருந்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத் துறைக்கு அனுமதி கிடைக்குமா இல்லையா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்.