தென்காசி மாவட்டத்தில் 2 விபத்துக்கள்- பலி
1 min read
2 Accidents in Tenkasi District- Killed
13.8.2023
தென்காசி பைக் மீது தனியார் பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). கூலித் தொழிலாளி இவர் நேற்று தென்காசியில் இருந்து பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு தனியார் பள்ளி வாகனம் அவரது பைக் மீது திடீரென மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணியன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி
தென்காசி மாவட்டம்,
சிவகிரி அருகே உள்ள மேட்டுபட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் தங்கமாரி மகன் விஜய் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று தனது அண்ணன் மருதுபாண்டியனுடன் இருசக்கர வாகனத்தில் சிவகிரிக்கு சென்றுள்ளார். பின்னர் விஜய் மட்டும் இருசக்கர வாகனத்தில் மேட்டுபட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் சிவகிரிக்கு தெற்கே உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஜய் சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் சண்முக லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.