பில்கிஸ்பானு வழக்கு: எந்த விதியின் அடிப்படையில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
1 min read
Pilgispanu case: Under which rule were the convicts acquitted? Supreme Court Question
18.8.2023
பில்கிஸ்பானு வழக்கில் எந்த விதிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்? என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது.
பில்கிஸ்பானு
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது பில்கிஸ்பானு என்ற கர்ப்பிணி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் 11 பேரும் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி குஜராத் மாநில அரசால் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து பில்கிஸ்பானு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நாகரத்தினா, உஜ்ஜால் புயான் ஆகியோர் தலைமையிலான நீதிபதி அமர்வு விசாரணை மேற்கொண்டது.
கேள்வி
இந்த விசாரணையில் குஜராத் அரசு தரப்பில், கடந்த 2008-ம் ஆண்டு தண்டனை பெற்ற 11 பேரும் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்துவிட்டனர். 1992-ம் ஆண்டில் தண்டனை குறைப்பு விதிகளின் படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில், குற்றவாளிகளின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த அவர்கள் எந்த விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்? ஏற்கனவே தண்டனை குறைப்பு செய்யப்பட்ட பிறகு மீண்டும் எப்படி தண்டனை குறைப்பு செய்யப்பட்டது?
1992-ம் ஆண்டு தண்டனை குறைப்பு கொள்கை எந்த அளவுக்கு மற்ற கைதிகளுக்கு பயன்பட்டது என்றும், இது எவ்வளவு தூரம் செயல்படுத்தப்படுகிறது என்றும், இது சம்பந்தமான தெளிவான தகவல்களை தர வேண்டும் என்றும் குஜராத் மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.