சந்திரயான் 3 வெற்றியை டூடுல் வெளியிட்டு கூகுள் கொண்டாட்டம்
1 min read
Google celebrates Chandrayaan 3 success by publishing doodle
31.8.2023
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது. இதனை கொண்டாடும் வகையில், கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு உள்ளது. சிறப்பு டூடுலில் சந்திரயான் 3 நிலவை சுற்றி வருவதும், தென் துருவத்தில் கால் பதித்ததும், இந்தியா சிரிப்பது போன்ற கார்டூன் வண்ணமயமான நிறங்ளில் அழகாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
டூடுலை கிளிக் செய்ததும், சந்திரயான் 3 பற்றிய தகவல்கள் மற்றும் செய்தி குறிப்புகள் அடங்கிய சிறப்பு பக்கம் திறக்கிறது. கடந்த ஜூலை 14-ம் தேதி ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 40 நாட்கள் நெடிய பயணத்தை நிறைவு செய்யும் வகையில், சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர், நேற்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி வரலாறு படைத்தது.
இதுவரை அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா போன்ற நாடுகள் தான் நிலவில் தரையிறங்கி இருக்கும் நிலையில், நிலவில் கால்பதித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதுதவிர நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் புதிய மைல்கல் சாதனைக்கு, உலக நாடுகள் மற்றும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலதுறைகளை சேர்ந்தவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.