June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் குழப்பிய கார்மேகக் கூந்தல்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram confused Karmega Kunthal / comedy story / Tabasukumar

17.9.2023
கண்ணாயிரம் அகத்தியர் அருவியில் எலுமிச்சம் பழம் தேய்த்து குளித்துவிட்டு வந்த போது அவரது முடி பஞ்சாக இருக்கிறது என்று பயில்வானும் மல்லிகை பூவா இருக்குது என்று பூங்கொடியும் சொல்ல தனது முடி வெள்ளையாக மாறிவிட்டதோ என்று கண்ணாயிரம் தவறாக புரிந்து கொண்டு அலறினார்.
அவரிடம் உங்க முடி மென்மையாக இருப்பதால் மல்லிகை பூமாதிரி இருக்கு என்று சொன்னதாக பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் உடனே.. அப்படின்னா கார்மேகம் மாதிரி கரு கருன்னு முடி இருக்கு என்று சொல்ல வேண்டியதுதானே என்று சொல்ல.. பூங்கொடியோ.. ஏங்க.. பெண்களின் முடியைத்தான் கார்மேகக் கூந்தல் என்று சொல்வாங்க.. ஆண்கள் முடியை அப்படி சொல்லமாட்டாங்க வேணுமுன்னாஉங்க முடியை தார்சாலை மாதிரி இருக்கு என்று சொல்லவா என்று பூங்கொடி எகிற கண்ணாயிரம்.. அடடா.. தார்சாலைக்கு மல்லிகை பூவே பரவாயில்லை என்று நினைத்து மல்லிகை பூன்னே சொல்லு என சொல்ல அனைவரும் சிரித்தனர்.
பூங்கொடி மட்டும்.. கண்ணாயிரம் கார்மேகக் கூந்தல் என்று சொன்னாரே.. பெண்களின் அழகான கருப்பான கூந்தலைத் தான் கார்மேகக் கூந்தல் என்று சொல்வாங்க.. கண்ணாயிரம் எந்த பெண்ணின் கூந்தலைப் பார்த்து கார் மேகக் கூந்தல் என்றார் என்று சந்தேகம் ஏற்பட்டது.
இலக்கிய வரிகள் எல்லாம் அவருக்கு வராதே..என்னை வர்ணித்து அப்படி ஒன்றும் பேசியது இல்லையே..கார்மேகக் கூந்தல் எங்கே பாத்தீங்கன்னு கேட்டிட வேண்டியதுதான்…அவரை விடக் கூடாது.. என்று முடிவு செய்தார்.
கண்ணாயிரத்திடம் ஏங்க..நீங்க கார்மேகக் கூந்தல் அப்படின்னு சொன்னீங்களே..எங்கே பார்த்தீங்க என்று கேட்க…காரிலதான் ..பார்த்தேன் என்றார் கண்ணாயிரம்.
அதைக்கேட்ட பூங்கொடி என்னங்க உளறுறீங்க..காரில போற பொண்ணின் தலைமுடியை பாத்தியளா ..என்று சத்தமிட.. கண்ணாயிரம்….ம்.. அது இல்ல பூங்கொடி..எங்க ஊருக்கு ஒரு கார் வந்துச்சு.. அது திடீரென்று நின்றுவிட்டது. பின்னர் டிரைவர் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஸ்டார்ட் பண்ணினார். அப்போ காரில இருந்து நிறைய புகை வெளியேறிச்சு.. புகையை கக்கிட்டு அந்த கார் போயிட்டு..ஆனாலும் அந்த கார்விட்டு சென்ற புகை சுருள் சுருளா கருத்த மேகம் மாதிரி.. அங்கேயே சுற்றி சுற்றி வந்தது. அந்த புகை வாயுக்குள்ளே போயி எனக்கும் ஒரே இருமல் வந்துச்சு.. இருமிக்கிட்டே இருந்தேன். கார் புகைபட்டு என்முடியும் கருப்பா மாறிட்டு.. அதை பார்த்தவங்க.. என்ன கண்ணாயிரம்..கார் புகையால் முடி கருப்பா மேகம் மாதிரி மாறிட்டா.. இன்று முதல் உன் கூந்தல் சாதாரண கூந்தல் அல்ல..கார்மேகம் கூந்தல் என்று பாராட்டினாங்க.. அதனாலத்தான்.. நான் கார்மேகக் கூந்தல் என்று சொன்னேன் என்க.. பூங்கொடியும் மற்றவர்களும் விழித்தார்கள்.
என்னய்யா..கார்மேகக் கூந்தலுக்கு புது அர்த்தம் சொல்லுறாரு..உண்மையிலே கார்மேகக் கூந்தல் என்றால் என்ன என்று சுடிதார் சுதாவிடம் பயில்வான் கேட்க.. அதுவா கார் என்றால் கரிய என்று பொருள்..கரிய மேகம் போன்ற கூந்தல் என்று சொல்லலாம்.
பெண்களின் குளித்துவிட்டு நீண்ட கரிய கூந்தலை விரித்து காயப் போட்டிருந்தால்.. கூந்தலில் இருந்து தண்ணீர் துளிகள் கீழே விழுந்து கொண்டிருக்கும்.. அதைப் பார்த்தால் மழைக்கால கரிய மேகத்திலிருந்து மழை துளி விழுவது போலிருக்கும். அதைத்தான் கார்மேகக் கூந்தல் என்று சொல்வார்கள் என சுடிதார் சுதா சொல்ல.. அதைக் கேட்ட கண்ணாயிரம்.. ஆ..அப்படியா.. ஓடுகிற காருக்கும்..அதுக்கும் சம்மந்தம் இல்லையா என்று கன்னத்தில் விரல்வைத்தார்.

நாம ஒண்ணு நினைக்க..அது ஒண்ணு நடக்கு என்ன செய்ய என்று கண்ணாயிரம் மனதில் நினைத்தார். சரி..அகத்தியர் அருவியில் நல்லா குளிச்சாச்சு…வயிறு பசிக்குது.. என்றார்.அதைக்கேட்ட பூங்கொடி..என்னங்க..வயிறு பசிக்குதா…பொறுங்க..கடைக்கு போவோம் என்று சொல்லும்போது…
ஒரு வேன் வேகமாக வந்து நின்றது. கடையம் முத்தமிழ் கலா மன்றம் பேனர் மாட்டப்பட்டியிருந்தது. சுற்றுலா பயணிகளை அன்போடு வரவேற்கிறோம் என்று அதன் நிர்வாகிகளுள் ஒருவராக ஜெயபிரகாஷ் கூறினார்.
லெமன் சாதம் பார்சல் தயிர்சாதம் பார்சல்.. தக்காளிசாதம் பார்சல் வழங்கினார்கள்.
கண்ணாயிரம் ஒவ்வொன்றிலும் ஒரு பார்சல் வாங்கிக் கொண்டார்.
முதலில் எலுமிச்சம் பழ சாதம் சாப்பிடுவோம் என்று பார்சலை பிரித்து பார்த்தார்.
ஆஹா..என்ன மணம்..அருமை என்றபடி நின்று கொண்டே சாப்பிட்டார்.
திடீரென்று அவருக்கு விக்கியது..தண்ணி..என்று கையைக் காட்டி பூங்கொடியிடம் கேட்க ..அவர் பாட்டலில் கொண்டு வந்த தண்ணீரை கொடுக்க.. கண்ணாயிரம் கட கட என்று குடித்தார். பூங்கொடி சுடிதார் சுதா பயில்வான் மற்றும் இளைஞர்கள் சாப்பிட்டனர்.
கண்ணாயிரம் லெமன் சாதம் முடிந்ததும் தயிர்சாத பார்சலை பிரித்தார்.
அதிலிருந்த மாங்காய் ஊறுகாய் அவருக்கு நாக்கில் எச்சிலை ஊற வைத்தது. அதை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். என்னங்க சாப்பிடாம பார்த்துக்கொண்டிருக்கிங்க..என்று கேட்க.. கண்ணாயிரம் மெல்ல..நான் ஒண்ணு கேட்பேன்.. நீ கோபப்படக் கூடாது என்றார்.
பூங்கொடியும்..ம் கேளுங்க..என்க..கண்ணாயிரம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு..இது என்ன ஊறுகாய்.. மாங்காய் ஊறுகாய்..மாங்காயை வெட்டி செய்யுறதால மாங்காய் ஊறுகாய் என்று சொல்லுறோம்..சரி.உனக்கு என்ன ஊறுகாய் இருக்கு என்று பூங்கொடியிடம் கேட்டார்.
அவர் தான் வாங்கிய தயிர்சாத பார்சலை பிரித்து அதிலிருந்த எலுமிச்சம் பழ ஊறுகாய் பார்த்துவிட்டு..எனக்கு எலுமிச்சம்பழ ஊறுகாய் இருக்கு என்றார்.
உடனே கண்ணாயிரம்..மெதுவாக..பூங்கொடி..எலுமிச்சம் பழ ஊறுகாய் எதில் தயார் செய்யப்பட்டது என்று கேட்க எலுமிச்சம் பழத்தில என்று பூங்கொடிசொல்ல கண்ணாயிரம் சிரித்தபடி அப்படின்னா.. எலுமிச்சம் பழத்தில் செய்யப்பட்ட இதை எலுமிச்சம் ஊறு பழம் என்றுதானே சொல்ல வேண்டும்.
ஏன் எலுமிச்சம் பழ ஊறுகாய் என்று தப்பா சொல்லுறாங்க என்று கேட்டார். அதைக் கேட்ட பூங்கொடி விழிக்க..மற்றவர்கள் ஆளைவிட்டால் போதும் என்று கையில் பார்சலுடன் பஸ்சை நோக்கி ஓடினார்கள்.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.