திருமணமான பெண்களுக்கான அழகிப்போட்டியில் சென்னை பெண் வென்றார்
1 min read
Chennai girl Meena wins title in beauty pageant for married women
17.10.2023
திருமணமான பெண்களுக்கான அழகிப்போட்டியில் சென்னை பெண் மீனா பட்டம் வென்றார்
அழகிப்போட்டி
பிலிப்பைன்ஸ் நாட்டில் திருமணமான பெண்களுக்கான அழகிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து திருமணமான 100-க்கும் மேற்பட்ட அழகான பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த மீனா கல்யாண் என்ற பெண்ணும் கலந்து கொண்டார். இந்த போட்டி பல்வேறு சுற்றுகளாக நடந்தது. ஒவ்வொரு சுற்றுகளிலும் மீனா கல்யாண் தொடர்ந்து முன்னேறினார்.
பின்னர் நடந்த இறுதி சுற்றில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி மீனா கல்யாண் வெற்றி பெற்று அழகான பெண்மணி என்ற பட்டத்தை வென்றார்.
அழகிப்போட்டியில் பட்டம் வென்று சென்னை திரும்பிய மீனா கல்யாண் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு எனது உடல் பருமனாகி விட்டது. நான் பருமனாக இருப்பதை பார்த்து பலரும் கேலி பேசினார்கள். நிறைய பேர் என்னிடம், நீங்கள் ஏன் உடல் எடையை குறைக்கவில்லை என்றும் கூறினார்கள். இதனால் நான் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளானேன்.
எனவே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அதன் மூலம் தான் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடியும் என்றும் கருதினேன். சாதிக்க வேண்டும் என்பதையே எனது லட்சியமாகவும் கொண்டேன்.
ஏற்கெனவே இண்டர்நேஷனல் அமெரிக்கா என்ற போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளேன். தற்போது மனம் தளராமல் முயன்று பிலிப்பைன்சில் நடந்த திருமணமான பெண்களுக்கான அழகிப்போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றுள்ளேன். இதன் மூலம் எனது லட்சியத்தை அடைந்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.