June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை குழப்பிய பேமானி/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Bemani who confused Kannayiram/ comedy story/ Tabasukumar

6.11.2023
கண்ணாயிரம் அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு சுற்றுலா பஸ்சை நோக்கி ஓடி வந்தபோது மழை பெய்ய அதில் நனைய உருண்டோடிய தேன் பாட்டிலை எடுக்க கீழே உருள மூன்றாம் பிறை கமலஹாசன் கடைசி காட்சியில் இருந்தது போல் கண்ணாயிரம் இருக்க அவரை குளித்துவிட்டுவரும்படி பூங்கொடி விரட்ட அவர் பாறையில் காட்டிய மழைநீர் ஆற்றில் நீந்தி குளித்தார்.
ஈரவேட்டியுடன் வந்த அவரை வேறு புது வேட்டி உடுத்திவரும்படி பூங்கொடி சொல்ல பஸ்சுக்கு பின்னால் சென்று கண்ணாயிரம் வேட்டியை மாற்ற முயல காற்றடிக்க அவர் அதனுடன் போராட அதைப்பார்த்த காரில் வந்தவர்கள் கஸ்மாலம் கஸ்மாலம் என்று திட்ட பதிலுக்கு கண்ணாயிரம் சாவுகிராக்கி சாவுகிராக்கி என்று திட்டினார்.
பஸ்சில் கண்ணாயிரம் ஏற வந்த போது பஸ்டிரைவர் ரிவர்ஸ் எடுக்க சக்கரத்தில் கண்ணாயிரம் சிக்காமல் இருக்க.. நெல்லைக்காரர்கள் மொழியில் ஏய் பைதா..ஏய் பைதா என்று கத்த கண்ணாயிரம் பையை கேட்கிறார் என்று புரியாமல் கத்த பயில்வான் சாவுகிராக்கி என்று கோபத்தில் கத்த ஒரே சத்தம்.

கண்ணாயிரம் சுற்றுலா பஸ்சில் ஏறிய போது பயில்வான் அவரை சீக்கிரம் பஸ்சில ஏறுங்க..மழை விட்டிருக்க நேரத்திலே நாம பாபநாசத்திலிருந்து கீழே போயிடணும் சீக்கிரம் சீக்கிரம் என்று அவசரப்படுத்தினார். கண்ணாயிரம் முகத்தை தடவியபடி பஸ்சுக்குள் பாய்ந்து ஏறினார். குளிர் அவரை வாட்டியது. தேடிப் பிடித்து பூங்கொடி எங்கே இருக்கிறார் என்று கண்ணுக்கு மேலே ஒரு கையை மடக்கிவைத்து பார்த்து கூர்மையாக தேடினார். அதைப் பார்த்த பூங்கொடி கோபத்தில்..நான் இங்கே இருக்கேன்..வேற எங்கே பாக்குறீங்க..வாங்க இங்கே என்க.. கண்ணாயிரம்..என்னய்யா ஒரே இருட்டா இருக்கு.. லைட்ட போடுங்கய்யா.. நான் இடம் தெரியாம வேற இடத்துக்கு போயிடப் போறேன் என்றபடி சுடிதார் சுதா இருக்கையை பார்க்க பூங்கொடி எழுந்து சென்று.. போனாலும் பொவாய்யா..அவா செண்டு போட்டிருக்கா.. அந்த வாசனையை பிடிச்சிட்டு போல பாக்கியளா விடமாட்டேன்.. வாங்க.. என்ற படி கண்ணாயிரம் கையை வலுவாக பிடித்து இழுத்தார்.
கண்ணாயிரம் இருட்டில்.. யாரு யாரு.. என்க நான்தான் பூங்கொடி என்க.. அப்படியா.. நான் வேற யாரோன்னு நினைச்சேன்.. ஏம்பா..மழை நேரம் சீக்கிரமே இருட்டிட்டு.. லைட்ட போடுங்கப்பா என்று கண்ணாயிரம் கத்த…
பஸ்சிலிருந்த ஒருவர்..யோவ் கத்தாதய்யா…சரி பார்க்காங்க. .எங்கேயோ வயர் அத்துட்டாம்..சீக்கிரம் பாத்திருவாங்க..சத்தம் போடாம இரு என்று சத்தம் போட்டார். கண்ணாயிரம்..சரி..சரி.. நல்லா பார்க்கச் சொல்லுங்க.. வேற எந்த ஒயரையும் கழற்றிவிடப் போறாங்க.. என்றபடி தன் இருக்கையில் அமர்ந்தார்.
விளக்கு எரிந்தது. அப்பாட…லைட்டு வந்துட்டு லைட்டு வந்துட்டு என்று கண்ணாயிரம் துள்ளி குதித்தார்.
அமைதியா இருங்க என்று பூங்கொடி கத்த அவர் வாயை கண்ணாயிரம் பொத்தினார்.
போங்க அங்க என்று பூங்கொடி தள்ள கண்ணாயிரம் இருக்கையின் ஓரத்துக்கு சென்றார்.

அப்போது பயில்வான் பஸ்சுக்குள் வந்தவர்..எல்லாரும் வந்தாச்சா..எல்லாரும் வந்தாச்சா..யாரும் வரவேண்டியது இருக்கா கண்ணாயிரம் வந்தாச்சா என்று கேட்டார். கண்ணாயிரம் கையை உயர்த்தி உள்ளேன் அய்யா என்றார்.
அதைக்கேட்ட பயில்வான்..என்ன இது பள்ளிக்கூடமா..உள்ளேன் அய்யான்னுக்கிட்டு..பேமானி..என்று திட்டினார்.
கண்ணாயிரத்துக்கு கோபம் வந்தது. என்ன பஸ்சில ஏற வந்தபோது சாவுகிராக்கி சாவுகிராக்கி என்று திட்டினீங்க.. கேட்டா பொருள் தெரியாதுன்னு சொன்னீங்க.. அப்புறம் கஸ்மாலம்.. கஸ்மாலமுன்னு ஒருத்தன் என்னை திட்டினான். அத நான் திட்டினதா நீங்க கேட்டிங்க.. அது நான் திட்டல..கஸ்மாலமின்னா என்னன்னு புரியாம நானே தவிச்சிட்டு இருக்கேன்.. இப்ப பேமானின்னு திட்டுறீங்க..அதுக்கு பொருள் சொல்லாம பஸ்சை எடுக்கக் கூடாது என்றார்.
பயில்வான் ..ச்சோ.. அதுக்கு என்ன அர்த்தமுன்னு தெரியாதுப்பா ..விட்டுரு என்று சொல்லிப் பார்த்தார்.
கண்ணாயிரம் விடுவதாக இல்லை. கண்ணாயிரம் கண்களை உருட்டியபடி எனக்கு ஒரு உம்ம (உண்மை) தெரிஞ்சாகணும்..அய்யா..என்று கேட்டார்.
பயில்வான் மூக்கை தடவியபடி சுடிதார் சுதாவுக்குத்தான்..இதுக்கு பதில் தெரியும். சுடிதார் சுதா..பேமானின்னா என்னம்மா..சொல்லு என்றார்.
சுடிதார் சுதா எழுந்து.. பேமானின்னா.. நாணயம் இல்லாதவர் என்று அர்த்தம் என்க கண்ணாயிரம் துடித்து போனார்.
அது தப்பு..அது தப்பு என்றார்.
எது தப்பு என்று சுடிதார்சுதா கேட்க.. கண்ணாயிரமோ.. என்னை பேமானி என்று பயில்வான் திட்டினார். பேமானி.. என்றால் நாணயம் இல்லாதவர் என்று அர்த்தம் சொல்லுறீங்க.. அப்ப நான் நாணயம் இல்லாதவனா என்று கேள்வி விடுத்தார்.
சுடிதார் சுதாவோ…ஆமா..நீங்க நாணயமில்லாதவர் தான் என்றார்.
கண்ணாயிரம் உடனே உண்மையாக.. சத்தியமாக.. நான் நாணயம் இல்லாதவனா என்று கேட்க சுடிதார் சுதா.. ஆமா.. உண்மையாக சத்தியமாக நீங்க நாணயம் இல்லாதவர்தான் என்று சொல்ல கண்ணாயிரம் கண்களை சிவப்பாக்கி உருட்டினார்.
சுடிதார் சுதாவோ..கண்ணாயிரம் நீங்க கண்களை சிவப்பாக்கி சொன்னாலும் சரி.. கண்களை உருட்டி சொன்னாலும் சரி..பேமானின்னா.. நாணயம் இல்லாதவர் என்றுதான் அர்த்தம் என்றார்.
உடனே கண்ணாயிரம்..பேமானி என்பது இந்த ஊரில் அந்த அர்த்தமா..எந்த ஊரிலும் அந்த அர்த்தமா என்று கேட்க..சுடிதார் சுதாவோ.. இந்த உலகத்தில் மட்டுமல்ல.. ஈரேழு உலகத்திலும்.. பேமானின்னா.. நாணயம் இல்லாதவர் என்றுதான் அர்த்தம் என்றார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம்..சுடிதார் சுதா என்னை நன்றாக உத்துப்பார்..என்க..சுடிதார் சுதா வேகமாக.. நீங்கள் கண்களை எவ்வளவு உருட்டுக்காட்டினாலும் சரி..பேமானின்னா..நாணயம் இல்லாதவர் என்றுதான் அர்த்தம் என்று உறுதியாக சொன்னார்.
கண்ணாயிரம் விடவில்லை.மீண்டும் ஒரு முறை என்னை நன்றாக உத்துப்பார் என்க.. சுடிதார் சுதா அவரை உத்துப்பார்த்தார்.
கண்ணாயிரம் வலது கண் அருகே ஒரு ரூபாய் நாணயத்தை கைவிரலில் பிடித்து காட்டினார்.
நான் நாணயம் இல்லாதவனா.. இப்படி யாரும் சொல்லிடக் கூடாது என்று எப்பவும் கால்சட்டை பையிலே நாலு ஒரு ரூபாய் நாணயம் வச்சிருப்பேன்.. இப்பம் என்னை காப்பாத்திச்சு.. நான் நாணயம் இல்லாதவனா..ஒரு நாணயமா இரண்டு நாணயமா..நான்கு நாணயம் உள்ளவன்.. என்னை நாணயம் இல்லாதவன்னு சொல்லமுடியாது.. சரியா என்றார்.
சுடிதார் சுதாவும் பயில்வானும் பதில் சொல்லமுடியாமல் திணறினார்கள்.
சுடிதார் சுதாவோ..நாணயமுன்னா.. இந்த நாணயம் இல்ல..வேற நாணயம் என்க கண்ணாயிரமோ.. ஒரு ரூபாய் நாணயம் மட்டுமல்ல பத்து ரூபாய் நாணயமும் என்பெட்டியல இருக்கு.. எடுத்து காட்டட்டுமா.. என்க சுடிதார் சுதா ஆடிப்போனார்.
ஏங்க..நாணயம் இல்லாதவருன்னா ஒழுக்கம் இல்லாதவர் என்று அர்த்தம் என்று சுடிதார் சுதா சொல்ல.. பூங்கொடி ஆவேசமாக எழுந்தார். என் கணவரைப் பார்த்து எப்படி ஒழுக்கம் இல்லாதவர் என்று எப்படி சொல்லலாம்… அவர் பத்தரை மாத்து தங்கம்.. எந்த பெண்ணையும் ஏறிட்டு பாக்கமாட்டார்.. நீதான் ஒழுக்கம் இல்லாதவ. கண்ட ஆம்பிளைகள் கூட வளவளான்னு பேசுவ என்று எகிற.. சுடிதார் சுதாவோ…அய்யோ நான் அந்த ஒழுக்கத்தை சொல்லவில்லை என்க வேற என்ன ஒழுக்கத்தை கண்ட என்று பூங்கொடி அலற பதட்டமானது.

பூங்கொடியோ சுடிதார் சுதாவைப் பார்த்து நீதான் ஒழுக்கம் இல்லாதவ..கண்ட கண்ட ஆளோட போவ..என்று சொல்ல..சுடிதார் சுதா கோபமாக..என்னடி சொன்ன என்றபடி அவர் மீது பாய இருவரும் ஒருவர் முடியை பிடித்து இழுக்க..கண்ணாயிரம் நடுவில் புகுந்து அமைதி அமைதி என்று கத்த சுடிதார் சுதாவிட்ட ஒரு குத்தில் கண்ணாயிரம் கையில் வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயம் தெறித்து ஓடியது. அவர் அய்யோ என் நாணயம்..அய்யோ என் நாணயம் என்றபடி பஸ் இருக்கைக்கு கீழே குனிந்து தேடினார்.
அப்போது அவர் முதுகில் பூங்கொடி காலால் மிதிக்க..அம்மாடி என்று கத்தினார்.
–வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.