விபத்தில் காணாமல்போன கண்ணாயிரம் / நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min readKannayiram lost in an accident / comedy story / Tabasukumar
14.11.2023
கண்ணாயிரம் மற்றும் சுற்றுலா பயணிகள் அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு புதுவைக்கு பஸ்சில் புறப்பட்டனர். இரவு 7 மணி அளவில் பஸ் புறப்பட்டபோது மழை கொட்டியது. இதனால் பஸ் தள்ளாடி தள்ளாடி சென்று ரோட்டில் கவிழ்ந்தது. எங்கும் ஒரே அலறல் சத்தம். காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று பெண்கள் என்று கத்தினார்கள்.
பஸ் கண்ணாடியை உடைத்து பயில்வான் மற்றும் இளைஞர்கள் வெளியே வந்தார்கள்.
தீயணைக்கும் படை மற்றும் போலீசாருக்கு தகவல் பறந்தது. அடுத்த வினாடி ஆம்புலன்ஸ் வேன்கள்..விளக்கை எரியவிட்டபடி வேகமாக வந்து சேர… தீயணைப்பு வீரர்களும் வாகனங்களில் வந்து சேர்ந்தனர்.
மீட்பு படையினர் விரைந்து வந்தார்கள். பஸ்சுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்தது.
பஸ்சின் முன்பகுதியை உடைத்து உள்ளே சென்று ஒவ்வொருவராக வெளியே கொண்டு வந்தனர்.
பூங்கொடி சுடிதார் சுதா துபாய்க்காரர் மற்றும் பெண்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தார்கள். சுடிதார் சுதா வெளியே வந்ததும் அவரது துப்பட்டா காற்றில் பறந்து சென்றது. அதைப் பார்த்த இளைஞர் ஒருவர் அய்யோ துப்பட்டா.. துப்பட்டா என்று கத்தியபடி அதை பிடிக்க ஓடினார். அதைப்பார்த்த பயில்வான்.. அந்த வாலிபருக்கு அடிபட்டு வாயில் ரத்தம் இருக்கு போல.. அதை துப்பட்டா..துப்பட்டான்னு கேட்டான் போலிருக்கு என்று நினைத்து ஏம்பா.. துப்பட்டா.. துப்பட்டாவான்னு கேட்கிறீய.. துப்பித் தொலை என்க.. அந்த வாலிபரோ தலையில் அடித்துக்கொண்டு துப்பட்டா.. சுடிதார் சுதா துப்பட்டா.. என்று சொல்லியபடி தொடர்ந்து ஓடினார்.
என்ன பய இவன்..சுடிதார் சுதாவே அதைப்பற்றி கவலைப்படலை..விபத்தில் சிக்கியவர்களை மீட்கிற வேலையிலே இருக்கா.. என்று சொன்ன பயில்வான் ..காயம் அடைந்தவர்களை கையைப்பிடித்து தூக்கி ஆம்புலன்ஸ்சில் ஏற்றினார்.
பஸ்சில் அய்யோ அம்மா..என்ற சத்தம் கேட்டது.. அதிக காயம் அடைந்தவர்கள்.. பாளை ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
சுடிதார் சுதா காயம் அடைந்த பெண்களுக்கு ஆறுதல் கூறி ஆம்புலன்சில் ஏற்றினார்.
பயில்வான் பஸ்சில் இருந்த பொருட்களை இறக்கினார். பூங்கொடி … தன் கணவர் எங்கே என்று தேடினார்.
ஏங்க..ஏங்க.. என்று சத்தம் கொடுத்தார். சத்தம் இல்லை. பஸ்சைவிட்டு இறங்கி எங்கேயும் போய்விட்டாரா.. எங்கே போய் தொலைஞ்சார்?…என்று ஏசினார்.
பயில்வான் பொருட்களை இறக்கிய போது.. பூங்கொடி.. தன் டிரக் பெட்டி கண்ணாயிரத்தின் சூட்கேஸ் தொப்பி சின்ன கைத்தடி.. ஒரு பக்கெட் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டார். பக்கெட்டைப் பார்த்தவர் அதில் தண்ணீர் இல்லாததால்..அய்யோ ஆராய்ச்சி பண்ணுறதுக்காக..தாமிரபரணி தண்ணி பிடிச்சுவச்சிருந்தாரே…அது என்ன ஆச்சு என்று புலம்பினார்.
பயில்வான். ஏம்மா..அவனவன் உயிரை கையிலே பிடிச்சு ஓடுறான்.. நீ தண்ணி கவுந்துட்டு..அது கவுந்துட்டு அப்படின்னு சொல்லுற..போ..போ.. என்று சத்தம் போட்டார்.
பூங்கொடி தன் கணவனை தேடி ஏங்க..ஏங்க..என்று கத்த பயில்வான் அவரிடம் ஏங்க.. ஏங்கன்னு கூப்பிடுறீங்க…யாரை தேடிறீங்க என்று கேட்க.. அவரைத்தான்..என்றார்.
அவரைத்தான் என்றால் யாரை என்று பயில்வான் கேட்க.. உங்களுக்கு தெரியாதா..அவரைத்தான் என்று பூங்கொடி சொல்ல.. பயில்வான் கோபமானார்.
ஏம்மா..அவரைத்தான்..அவரைத்தான் என்று சொன்னால் யாரு..பெயரைச் சொல்லுங்க என்று பயில்வான் எகிற.. அவர் பெயரை நான் இதுவரை வாயால சொன்னதில்லை என்க பயில்வான் கடுப்பானார்.
ஏசும்போது முட்டாப்பயல..அறிவு கெட்டவனே என்று ஏன் ஏசுறீங்க என்று பயில்வான் கேட்க.. பூங்கொடியோ அவர் பெயரைச் சொல்லக் கூடாதுல்லா..அதான் அப்படிச் சொல்வேன் என்றார்.
இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை..அவரை உதை உதைன்னு உதைக்கிறது.. கேட்டா பெயரைச் சொல்லமாட்டேங்கிறது.. இப்ப.. ஏங்க.. ஏங்க.. என்கிறது..ம் என்று சத்தம் போட்டார்.
பூங்கொடி மறுபடியும் ஏங்க..ஏங்க என்று கூப்பிட.. பயில்வான்.. ஏங்க..பஸ்சிலே யாரும் இல்ல. .எல்லோரையும் கீழே இறக்கியாச்சு..என்றார்.
உடனே பூங்கொடி..அய்யோ அவரைக் காணோமே..மழையிலே குளிச்சதாலே குளிர் அடிக்குதுன்னு என் சேலையால உடம்பு முழுவதும் மூடி நல்லா தூங்கிட்டு இருந்தாரு..அவர் என்ன ஆனாரோ தெரியலையே என்று புலம்பினார்.
பயில்வான் உண்மையை புரிந்து கொண்டு கண்ணாயிரத்தை எங்கேப்பா என்று கேட்க.. இளைஞர்கள் நாங்க பாக்கல என்றனர்.
சேலையை மூடியிருந்ததால..அடையாளம் தெரியாம போயிட்டோ என்று பயில்வான் கேட்க.. சுடிதார் சுதா மெல்ல..சேலையால் சுத்தின ஒருத்தர்.. பேச்சு மூச்சு இல்லாம இருந்தார். சேலை மூடியிருந்ததால் பெண் என்று நினைத்து ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினேன் என்றார்.
அதைக்கேட்ட பூங்கொடி..அது பச்சை சேலையா என்று கேட்க.. சுடிதார் சுதா ஆமா என்று தலையை ஆட்டினார். பூங்கொடி..அய்யோ.. தயிர்சாதம் சாப்பிடாதீங்க..தூக்கம் வரும் என்று சொன்னேன்..கேட்காம அதை சாப்பிட்டுவிட்டு தூங்கிட்டாரோ தெரியலையே.. என்று கத்தினார். அவரை நான் எங்கே போய் பாப்பேன் என்று பூங்கொடி கதற..பயில்வான் அவரை அமைதிப்படுத்தினார்.
அதிக காயமுன்னா..பாளை ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போவோம் என்று ஆம்புலன்ஸ் டிரைவர் சொன்னார்.
கவலைப்படாதீங்க..அங்கே போய் பாப்போம் என்றார்.
பூங்கொடி..அய்யோ..என்வீட்டுக்காரரைப் பாக்கணும்..நான் என்ன செய்வேன்..என் சேலையை வேற கொண்டு போயிட்டாரே…என்று கண்கலங்கி அழுதார்.
கடையம் முத்தமிழ் கலா மன்றம் சார்பாக..வேன் ஒன்று வேகமாக வந்து நின்றது. பாளைஹைகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு போறவங்க எல்லாம்.. ஏறுங்க..காயம் அடைஞ்சவங்க எல்லாம் அங்கத்தான் இருக்காங்க..உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறதுக்காக வந்திருக்கோம் என்று ஒருவர் கூறினார்.
உடனே எல்லோரும் அந்த வேனில் ஏறினார்கள். சுற்றுலா பஸ் டிரைவர்..உதவி டிரைவர் அங்கே நின்றனர்.
பஸ்சை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது.
பாளைஹைகிரண்டு ஆஸ்பத்திரிக்கு வேன்புறப்பட்டது. என் வீட்டுக்காரரைப் பாத்தீங்களா என்று பூங்கொடி கேட்க..டிரைவர். மெதுவா வாங்க..அங்கேபோய் பாத்துக்கலாம் என்றார்.
பூங்கொடி ஓ…என்று அழுதார்.(தொடரும்)
வே.தபசுக்குமார்..புதுவை.