May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

ஸ்கேனில் தெரியாத கண்ணாயிரம் மூளை/ தபசுகுமார்/ தபசுகுமார்

1 min read

Kannayiram brain not seen in scan/ Tapashukumar/ Tapashukumar

25.4.2024
கண்ணாயிரம் தேர்தல் நேரத்தில் ஜவுளிக்கடைக்காரரிடம் வாங்கிய நாப்பதாயிரம் கடனை அவர் திருப்பிக்கேட்டதால் கண்ணாயிரம் டென்சனாகி மயங்கி விழ அவர் மயக்கம் தெளிந்தபோது பழைய நினைவுகள் மறந்தவராகப் பேசினார்.அதனால் அவருக்கு என்னப் பிரச்சினை என்று கண்டுபிடிக்க அவரை அவரது மனைவி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று காண்பித்தார்.கண்ணாயிரத்தை டாக்டர் பார்த்துவிட்டு அவரது மூளையில் ஏதாவது பாதிப்பு இருக்கலாம்.. அதை கண்டறிய தலையை ஸ்கேன் எடுத்துப் பார்க்கவேண்டும் என்றார்.
கண்ணாயிரம் மனைவியோ அவருக்கு மூளையேக் கிடையாது என்று சொல்ல கண்ணாயிரமோ தனக்கு மூளை அதிகம் இருக்கு என்று நினைக்க ஸ்கேன் எடுக்க கண்ணாயிரம் அந்த அறைக்குள் சென்றார்.

கண்ணாயிரம் அந்த ஊழியரிடம் இதுக்கு முன்னால உங்க மூளையை ஸ்கேன் எடுத்திருக்கியளா என்று விசாரித்துவிட்டு ஸ்கேன் எடுப்பதற்காக அந்த எந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்தார்.
கண்ணாயிரத்தை ஸ்கேன் எந்திரம் உள்ள பகுதியில் படுக்கவைத்துவிட்டு.. சத்தம் போடக் கூடாது.. அமைதியாக இருக்கவேண்டும் என்று எச்சரித்தார்.
கண்ணாயிரம் வழக்கம் போல் கண்களை மூடிப் படுத்துக்கொண்டார். ஸ்கேன் எந்திரம் கண்ணாயிரத்தின் தலைப்பகுதியை ஸ்கேன் எடுக்க முயன்றார்.
கண்ணாயிரம் ..கண்களை இறுக மூடிக்கொண்டார். எனக்கு மூளை இருக்கு என்று நிரூபிக்கணும்..எந்த தவறும் நடந்திடக் கூடாது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.
ஸ்கேன் எந்திரம் இயங்கியது.ஊழியர் பல கோணங்களில் ஸ்கேன் பண்ணினார். மூளை இருக்கா இல்லையா என்று பார்ப்பதற்கும் மிஷின் இருக்கு.. உலகம் ரொம்ப முன்னேறிவிட்டது.. இந்த அருவா விக்கிறவனுக்கும் மூளை இருக்கா இல்லையான்னு தெரியல..ஆஸ்பத்திரில வந்து அருவா விக்க வந்திருக்காரே.. அவருக்கும் மூளை இருக்கா என்று பார்க்க ஒரு ஸ்கேன் எடுத்திட வேண்டியதுதான்..என்று கண்ணாயிரம் நினைத்தார்.
ஐந்து நிமிடம் ஆனவுடன் ஊழியர்..ஆல்ரைட்..எழும்புங்க..முன் பகுதியில் போய் இருங்க..ஸ்கேன் ரிப்போர்ட் கொடுக்கிறேன் என்றார்.
கண்ணாயிரம்..ம்..மூளை இருக்கா இல்லையா என்று நல்லா பாத்துச் சொல்லுங்க.. முக்கியமான சமாச்சாரம் என்று ஊழியரிடம் சொல்ல, அவர்..சரி..சரி..அதை நான் பாத்துக்கிறேன். நீங்க முன்னேப் போய் உட்காருங்க..என்றார்.
கண்ணாயிரம் மெல்ல..ஏங்க தலையிலே மட்டும் தான் ஸ்கேன் பண்ணினிங்க..என் உடம்பு முழுவதும் ஸ்கேன் பண்ணல.. எனக்கு உடம்பு முழுவதும் மூளைங்க என்றார்.
அதற்கு ஊழியர்.. ஒருபானைக்கு ஒரு சோறு பதம் என்பாங்க…சோறு வெந்துட்டா என்றுப் பார்க்க எல்லா சோறையும் அழுத்திப் பாப்பாங்களா.. இல்லையே.. ஒரு சோறை மட்டும் எடுத்து அழுத்திப்பார்த்தாலே எல்லா சோறும் வெந்திட்டு என்று தெரியும். அப்படித்தான் தலையில ஸ்கேன் எடுத்தாலேப் போதும்.. மூளை பற்றிய விவரம் தெரிஞ்சிடும் என்றார்.
உடனே கண்ணாயிரம் , ஒரு மூளைக்கு ஒரு ஸ்கேன் பதம் என்று சொல்லுறீங்க.. நீங்க ரொம்ப மூளையோட பேசுறீங்க என்று சொல்லி சிரித்தார்.
ஊழியரும்,ஆமா..ஆமா என்று தலையில் அடித்தபடி..போய் அங்கே இருங்க என்று சொல்ல, கண்ணாயிரம் தலையை அசைத்தபடி டாக்டர் இருக்கும் அறைக்கு முன்னால் நடந்து சென்றார்.
பூங்கொடி அவரிடம், ஏங்க ஸ்கேன் எடுக்க இவ்வளவு நேரமா..என்று கண்டித்தார். கண்ணாயிரம்,சத்தம் போடாத, இது மூளை சம்மந்தப்பட்ட விஷயம்.. நல்லா ஸ்கேன் பண்ணினாத்தானே.. மூளை இருக்கான்னு கண்டுபிடிக்க முடியும் என்றார்.
பூங்கொடி, உங்களுக்கு மூளை இருக்கா என்று ஸ்கேன் பண்ணித்தான் பாக்கணுமா.. உங்க பேச்சிலேயேத் தெரியுது.. என்று சிரித்தார்.
கண்ணாயிரம், இருந்தாலும்..மூளை இருக்கு என்பதற்கு ஒரு ரிக்கார்டு வேண்டுமுல்லா..எவனாவது மூளை இருக்கா என்று கேட்டால் ,..இதோ பாருய்யா..ரிக்கார்டை என்று எடுத்துக்காட்டிரலாமுல்லா..என்ன சொல்லுறீங்க..என்றார்.
பூங்கொடி,ம்..சரிதான் என்று தலையாட்டினார்.
கண்ணாயிரம்..ஆமா ஒரு சந்தேகம், உங்களுக்கு கல்யாணம் ஆயிட்டா ..என்று கேட்க, பூங்கொடி ம்..ஆயிட்டு என்றார்.
கண்ணாயிரம்..ஓ ..அப்படியா..உங்க வீட்டுக்காரரு..துபாயில் இருக்காரா என்று கேட்க , பூங்கொடி..இல்லை பக்கத்திலேதான் இருக்கார் என்றார்.
கண்ணாயிரம்,எனக்கு ஹெல்ப் பண்ணுறதுக்காக என் கூட வர்ரீங்க..தேங்ஸ்..எங்க அம்மா வந்தவுடன் போயிருங்க என்று சொல்ல, பூங்கொடி..பொங்கி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டார்.
அந்த நேரத்தில் ஒரு ஊழியர்.. யாருங்க கண்ணாயிரம்..டாக்டர் கூப்பிடுகிறார் என்று சொல்ல, கண்ணாயிரம் இதோ வந்துட்டோம் என்றபடி டாக்டர் அறைக்குள் புகுந்தார்.
பூங்கொடியும் அவர் பின்னால் செல்ல, டாக்டர் அவர்களை உட்காருங்க என்றார்.
கண்ணாயிரம்.. டாக்டர் நல்ல தகவலா சொல்லுங்க என்றபடி அமர்ந்தார்.
டாக்டர் ஸ்கேன் ரிப்போர்ட்டை மூக்கு கண்ணாடிப் போட்டு திரும்ப திரும்பப் பார்த்தார். கையில் எடுத்து தூரத்தில் வைத்துப் பார்த்தார்.கண்ணாயிரத்தையும் பார்த்தார்.
கண்ணாயிரம்..உடனே..என்ன டாக்டர் மூளை அதிகமா இருக்கா என்று கேட்க, டாக்டர் டென்சனாகி..மூளையையேக் காணமய்யா ..என்று சொல்ல , பூங்கொடி புன்னகையுடன்.. நான்தான் அப்பவே சொன்னேன டாக்டர்..அவருக்கு மூளை கிடையாதுன்னு சொன்னேன். நீங்க கேட்கல, ஸ்கேன் சொல்லுறதைத் தான் நம்புவேன்னு சொன்னீங்க.. இப்போ என்ன சொல்லுறீங்க என்று கேட்டார்.
டாக்டர் கோபமாக ,கொஞ்சம் பொறும்மா..ஸ்கேன் எடுக்கும்போது ஏதோ பிரச்சினை ஆயிருக்கு.. மூளை இருக்கிற பகுதியே பதிவாகல..என்றவர் ஸ்கேன் பதிவு செய்த ஊழியரை பெல் அடித்து அழைத்தார்.
கண்ணாயிரம்..என்ன டாக்டர்..என்ன பிராப்பிளம்..என்று கேட்க, கொஞ்சம் அமைதியாக இருங்க..உங்க மூளையை கண்டுபிடிச்சே தீருவேன் என்றார்.
அப்போது,ஸ்கேன் எடுத்த ஊழியர் வேகமாக உள்ளே வந்தார்.என்ன டாக்டர்..ஸ்கேனில் பிரச்சினையா என்று கேட்டார்.
டாக்டர்,மூளை இருக்கா என்று கேட்க, ஊழியர் ஸ்கேனை வாங்கிப் பார்த்துவிட்டு..ஆமா,மூளை இல்லை சார் என்றார்.
டாக்டர் எரிச்சலாகி, ஏங்க..மூளை இருக்கு..இல்லை என்கிறது பிரச்சினை இல்லை.. மூளை இருக்கிற பகுதியே ஸ்கேனில் பதிவாகலையே ஏன் என்று கேட்ட போது, ஊழியர்..சார், இடையிலே கரண்டு போயிட்டு உடனே வந்துச்சு.. அந்த நேரத்திலே மூளை பகுதி ஸ்கேனில் பதிவாகாமல் இருந்திருக்கலாம்..புதிதாக ஒரு ஸ்கேன் எடுக்கலாம் என்றார்.
கண்ணாயிரம் என்ன மீண்டும் முதலில் இருந்தா என்று கேட்க ,டாக்டர், ஆமா. ..ஆமா..ஆமா..என்க கண்ணாயிரம்..டாக்டகருக்கும் ஒரு ஸ்கேன் எடுக்க வேண்டியதுதான் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்
புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.