சொர்க்கத்தில் கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
Kannayiram in Heaven/ comedy story/ Tabasukumar
13.12.2023
கண்ணாயிரம் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது மாலை பத்திரிகை நிருபர் அவரை பேட்டி காண வந்திருந்தார்.
கண்ணாயிரம் அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு தயிர்சாதம் சாப்பிட்டதால் சுற்றுலா பஸ்சில் புதுவை புறப்பட்டபோது தூங்கிவிட்டதாகவும் அப்போது கனவு கண்டபோது கலர் கலரா பெண்கள் தன்னை ஊஞ்சலில் மேல கொண்டு சென்றதாகவும் கூறினார்.கதை வேண்டாம் விபத்து நடந்தது எப்படி என்று சொல்லும்படி நிருபர் கேட்டபோது கொஞ்சம் இருங்க.. இனிமேல்தான் கதை இருக்கு என்று சொல்லத் தொடங்கியவர்.. திடீரென்று பூங்கொடி எட்டிப்பார்த்ததால் திடுக்கிட்டார். பின்னர் நிருபரிடம்.. கொஞ்சம் இருங்க.. கலர் படம் எடுக்கணுமுல்லா.. நான் மேக்கப் போடுறதுக்கு பூங்கொடியிடம் கொஞ்சம் பவுடர் வாங்கிட்டு வந்திடுறேன் என்றபடி சேலையை தோளில் தொங்கவிட்டபடி அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே வந்தார்.
அங்கே பூங்கொடியை காணவில்லை.எங்கே ஆளைக் காணம் என்றபடி கண்ணாயிரம் அங்கும் இங்கும் தேடியபோது சுடிதார் சுதா அங்கு வந்தார். என்ன பேட்டி முடிஞ்சுட்டா.. வந்திட்டீங்க என்று கேட்க.. கண்ணாயிரம்..ம்.. பேட்டி பாதிதான் முடிஞ்சிருக்கு..என்னை கலர் கலர் பெண்கள் வானுலகத்துக்கு தூக்கிச் செல்லுறாங்க.. பாதி வழியில் அந்த பெண்கள் என் கன்னத்திலே அறைஞ்சிட்டாங்க.. அதோட நிக்குது.. மீதி சொல்லணும்.. எனக்கு கலர் படம் எடுக்கணும்.. அதுக்கு மேக்கப் போடணுமுல்லா.. அதான் பூங்கொடிக்கிட்ட பவுடர் வாங்கிறதுக்காக தேடுறேன்.. ஆளை காணம் நீங்க என்ன பேக் வச்சிருக்கீங்க.. என்று கேட்டார்.
அதற்கு சுடிதார் சுதா..அதுவா நான் மேக்கப் போடுறதுக்கான பொருட்களை வச்சிருக்கேன் என்றார். கண்ணாயிரம்.. உற்சாகமாகி.. கொஞ்சம் கொடுங்க.. நான் மேக்கப் போட்டுட்டு கொடுத்திடுறன்.. என்க சுடிதார்சுதா.. ஏங்க இது பெண்களுக்கான மேக்கப் பொருள் உள்ள பாக்ஸ்.. என்று சொல்ல.. கண்ணாயிரம்..ம்.. அதெல்லாம் பரவாயில்லை.. கொடுங்க என்று சுடிதார்சுதாவிடம் வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டு வேகமாக அவசர சிகிச்சை பிரிவுக்குள் ஓடினார்.
நிருபரிடம்.. சாரி..போட்டோ எடுக்க மேக்கப் பொருள் எல்லாம் வாங்கிவந்துட்டேன்.. பேட்டியைத் தொடரலாமா என்று கேட்டார்.
நிருபர் குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு சொல்லுங்க என்க.. கண்ணாயிரம்.. ஆமா.. நான் எந்த இடத்திலே விட்டேன்.. என்று பரிதாபமாக கேட்டார்.
அதற்கு நிருபர்..அதுவா பெண்கள் உங்க கன்னத்திலே பளார் என்று அறைந்தார்களே அந்த இடத்திலே விட்டீங்க.. என்றார்.
கண்ணாயிரம் சுதாரித்துக்கொண்டு..ஓ..ஆமா..அறை பலமாத்தான் இருந்துச்சு.. அந்த பெண்களிடம்.. ஏன் என் கன்னத்திலே அடிச்சிங்க என்று கேட்டேன்.. அவங்க சிரித்தபடி அதுவா.. உங்கள் கன்னத்திலிருந்தது கொசுவா இல்லை மச்சமா என்று சந்தேகம் வந்தது. அதாம் அடிச்சோம்.. கொசு பறந்துபோச்சு..என்றனர்.
கண்ணாயிரம்.. ஆ.. அப்படியா.. இங்கே கொசு தொல்லை அதிகம் என்று சொல்ல மேல் உலகில் கொசுவே கிடையாது என்று அந்த பெண்கள் சொன்னார்கள்.
கண்ணாயிரம்..ஓ..அப்படியா..பரவாயில்லையே..கொசுக்கடி இல்லைன்னா அங்கே தங்கிடலாமே என்று மகிழ்ச்சியடைந்தார்.
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டா என்று கேட்கலாமா என்று யோசித்தேன்.மறுபடியும் கன்னத்தில் கொசு இருக்குன்னு சொல்லி அடிச்சிட்டா என்னப் பண்ணுறது என்று நினைத்தேன்.
அதனால..மெல்ல..ஏங்க..இந்த கொசு எதுவரைக்கு பறக்கும் என்று கேட்டார். அதற்கு அந்த பெண்கள்..கலகல என்று சிரித்தவாறு பூலோக காற்று எதுவரைக்கும் இருக்கோ அதுவரை கொசு பறக்கும்.. என்றார்கள்.
கண்ணாயிரம் அப்படியா..அந்த இடம் வர ரொம்ப நேரமாகுமா என்று அப்பாவியாகக் கேட்டேன் அவர்கள்..ம்..என்று மட்டும் பதில் சொன்னார்கள்.
நமக்கு எதுக்கு வம்பு என்றபடி நான் ஜாலியாக ஊஞ்சலில் இருந்து எட்டிப்பார்த்தேன்.. அம்மாடி.. ரொம்ப தூரம் வந்துட்டேன்.. கீழே பாத்தா.. சின்னதா காரு, வேனு ஓடுது. பயமா இருந்துச்சு.
விமானத்திலே போனா.. மேல இருந்து கீழே பாக்கலாம்.. அதுக்கு காசு வேணுமே.. இப்போ மேல் உலக பெண்கள் இலவசமாக குளிக்கவச்சி ஊஞ்சலில் கொண்டு போறாங்க… சத்தம் காட்டாம மேல் உலகை சுத்திப் பாத்திட்டு வந்திடுவோமுன்னு அமைதியா இருந்தேன்.
இந்த கிரீடம் வேற தலையிலே அழுத்திச்சு..அதை கழற்ற முடியாம தவிச்சேன். வாள் வேற.. இடைஞ்சலா இருந்துச்சு.. இதைச் சொன்னா..மேல இருந்து கீழே தள்ளிவிட்டா என்னப் பண்ணுறது.. அதனால.. பேசாம இருந்தேன்.
ஊஞ்சல் மேல போயிக்கிட்டே இருந்துச்சு.. ஒரே பாட்டு சத்தமா கேட்டுச்சு.. என்ன இசைக் கச்சேரியா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அது இந்திரலோகம்.. அங்கு பாட்டுபாடி ஆடுவாங்க .நாமும் அங்குதான் போறோம் என்றார்கள்.
எனக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. அடே.. இலவசமா.. ஆடல் பாடல் நிகழ்ச்சி பாக்கலாம். ஊரில போய் எல்லோரிடமும் சொல்லலாம் என்று நினைத்தேன்.
சிறிது நேரத்தில் இந்திரலோகம் வந்தது. ஊஞ்சலில் இருந்து இறக்கி என்னை ஒரு அரங்கத்திற்குள் அழைத்துச் சென்றனர். அங்கே அரியாசனத்தில் இந்திரன் அமர்ந்திருந்தார். ரம்பை,ஊர்வசி,மேனகா என்று சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தார்கள்.
ஆஹா..என்ன அழகு..என்ன அழகு.. இந்திரன் ரசித்துக்கொணடிருந்தார். அவரைப் பார்த்து நான் குட்மார்னிங் என்றேன்.
உடனே கவர்ச்சி பெண்கள்..ஊஷ்
. இப்போ..இரவு.. குட்நைட் என்றுதான் சொல்லவேண்டும் என்றார்கள்.
சரி என்றேன்.
ரம்பையின் நடனத்தைப் பார்த்ததும் எனக்குள் ஒரு வேகம் வந்தது. நான் யாரடி..நீ மோகினி..பாரடி நீ கண்மணி என்று கைகளை ஸ்டைலாக தட்டி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல் ஆடிப்பாடினேன்..
ரம்பை ஓடிவந்து என்கையைப் பிடிக்க அதைப்பார்த்த இந்திரன் கோபமாகி.. யாரடா..மானிட பதரே.. இவனை பிடித்து வெளியே வீசுங்கள் என்று உத்தரவிட்டார்.
உடனே நான்கு பேர் என்னை அலாக்காக தூக்கி இந்திரலோகத்து அரங்குக்கு வெளியே வீசினார்கள். நான் அம்மாடி என்று விழுந்தேன்.
அப்போது ஐந்து குண்டர்கள் கையில் கயிறோடு நின்றார்கள். யார் நீ..என்று கேட்டனர். நான் கண்ணாயிரம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்னேன்.
அவர்களில் ஒருவன்..ஹா..ஹா..ஹா..என்று பலமாக சிரித்தபடி நீதான் கண்ணாயிரமா.. உண்மையாக என்று கேட்டான்.
நான் ஆமா என்றேன்.
அடுத்தவன் சத்தியமாக என்று கேட்டான்.நான் ஆமாய்யா ஆமா என்றேன்.
உடனே அவன்..தூக்குடா அவனை என்று சொல்ல மற்ற குண்டர்கள் என்னை அலாக்காக தூக்கினார்கள். ஒருவன் என் முகத்தில் குத்தினான். உன்னை எங்கெல்லாம் தேடுறது.. இந்திர லோகத்தில் வந்து டான்சா ஆடுகிறாய் என்றபடி கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.
நான் வலிக்காம அடிங்க என்றேன். கயிறை என் கழுத்தில் போட்டு..வாடா வா என்று எமலோகத்துக்கு இழுத்துச் சென்றார்கள்.
கழுத்து வலிக்கு என்றேன் விடவில்லை. இளவரசர் வேடம் போட்டா.. ஆள் தெரியாதுன்னு நினைச்சியா.. இந்தா பிடி என்று கன்னத்தில் ஒரு குத்து விழுந்தது.
ரொம்ப நாளா வலிக்க என் பல் விழுந்தது. ரத்தம் சொட்ட சொட்ட எமதர்மன் முன் கொண்டுபோய்விட்டார்கள்.
அவர் கையில் நைலான் கயிறுவைத்திருந்தார். வீரப்பா மாதிரி.. ஹ..ஹ..ஹா..ஹா.ஹா என்று இடிமுழங்க சிரித்தார்.
நானும் பதிலுக்கு நம்பியார் மாதிரி.. ஆ..ஆ.ஆ. என்று சிரித்தேன்.
எமலோகத்தில் சிரிக்கும் இவன் யார் என்று அவர் கேட்க.. இவர்தான் கண்ணாயிரம் என்றார்கள்.
அப்படியா..இவரது அங்க அடையாளங்களை பார்த்தீர்களா என்று எமதர்மன் கேட்க இல்லை என்று அவர்கள் சொல்ல.. எமதர்மன் கோபமானார்.
நாம் பிடிக்க வேண்டிய கண்ணாயிரத்துக்கு கழுத்தில மச்சம் இருக்கும். இவனுக்கு இருக்கா என்று பாருங்கள் என்றார்.
குண்டர்கள் என்னை சோதித்துவிட்டு இல்லை என்க.. எமதர்மன்..ஆவேசத்தில் தவறு செய்து விட்டீர்கள்.
இவனுக்கு எந்த ஊர் என்று கேட்டார். நான் புதுவை என்றேன்.
அவர்..நாம் பிடிக்கவேண்டிய கண்ணாயிரத்துக்கு சொந்த ஊர் விழுப்புரம்.. தவறுதலாக பிடித்துவந்துவிட்டீர்களே.. என்று கத்தினார்.
அய்யா.. விழுப்புரம் கண்ணாயிரம் ரியல் எஸ்டேட் பிரச்சினையில் தலைமறைவா இருக்காரு. .போலீஸ் தேடிக்கிட்டு இரூக்காங்க.. அவங்களாலே கண்டுபிடிக்க முடியல.. அதான் இங்கே தப்பி வந்திருக்கலாம் என்று நினைத்து பிடித்தோம் என்க.. எமன் பற்களை கடித்தபடி.. இவருக்கு ஆயுசு அதிகம். 90 வயசுவரை ஆயுஸ் இருக்கு.. தவறுதலாக 39 வயசிலே பிடிச்சிட்டுவந்திட்டீங்களே.. கண்ணைக்கட்டி புதுவையில் கொண்டு போய்விடுங்கள் என்று ஆணையிட்டார்.
குண்டர்களோ என் கண்களை கட்டி இழுத்து வந்து நடுவானத்திலிருந்து போடா என்று கீழே தள்ளிவிட்டார்கள். நான் உருண்டு புரண்டு கீழே விழுந்தேன்.
மயக்கம் வந்தது. விழிச்சு பாத்தா..ஆஸ்பத்திரியிலே இருக்கேன் என்றவாறு நிருபரை பார்த்தார். அவர் கன்னத்தில் கைவைத்து குறட்டை விட்டபடி இருந்தார்.
(தொடரும்).
-வே.தபசுக்குமார்.