கலகலப்பை ஏற்படுத்திய கண்ணாயிரம் மேக்கப் / நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min readKannayiram Makeup that created a stir / comedy story / Tabasukumar
15.12.2023
கண்ணாயிரம் சுற்றுலா பஸ் விபத்தில் காயம் அடைந்து பாளை ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது விபத்து குறித்து மாலை பத்திரிகை நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது விபத்து நடந்ததைப் பற்றி சொல்லாமல் தான் கனவு கண்டதாகவும் வானுலகத்துக்கு கலர் கலர் பெண்கள் ஊஞ்சலில் கொண்டு சென்றதாகவும் எமலோகத்தில் விழுப்புரம் கண்ணாயிரத்துக்குப் பதில் தவறுதலாக தன்னை கொண்டு சென்றுவிட்டதாகவும் அதனால் நடுவானிலிருந்து கீழே தள்ளிவிட்டதால் பூமியில் உருண்டு வந்து விழுந்தேன் என்று அப்பாவித்தனமாக சொன்னார்.
பேட்டி முடித்துவிட்டு நிருபரை பார்த்தபோது அவர் கன்னத்தில் கைவைத்து தூங்குவதைப் பார்த்த கண்ணாயிரம் கோபம் அடைந்தார். என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு.. நான் உயிரைக்கொடுத்து பேட்டி கொடுக்கிறேன்.. நீங்க குறிப்பெடுக்காம தூங்கிறீய..என்று சத்தம் போட்டார்.
உடனே நிருபர்..ஏங்க தூங்கலை.. கண்மூடி கேட்டுக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல.. கண்ணாயிரம் நான் சொன்னதை சொல்லுங்க என்றார். உடனே நிருபர் செல்போன்னை ஆன் செய்தார். பதிவானகண்ணாயிரம் பேட்டி எதிரொலித்தது.
அன்னைக்கு இரவு 7 மணி இருக்கும் என்று பேட்டி தொடங்கியது. அதைக் கேட்டதும் கண்ணாயிரம் அசந்துபோய்விட்டார். ஏங்க.. குறிப்பெடுப்பீங்கன்னு பார்த்தா..பதிவு பண்ணியிரூக்கீங்க.. டெக்னாலஜி எவ்வளவு வளர்ந்துட்டு இருக்கு.. அடே..பரவாயில்லையே என்று வியந்தார்.
நிருபர் அவரிடம் உங்களது உண்மையான வயசு என்ன என்று கேட்க..கண்ணாயிரம் கடுப்பாகி ஏய்யா..எத்தனை முறை சொல்லுறது. ஆடி பிறந்தா ஐம்பது பிறக்குது என்றார். அப்படி என்றால் இப்போது உங்களுக்கு 49 வயசு தானே என்று நிருபர் கேட்க ஆமா அதில் என்ன சந்தேகம் என்றார் கண்ணாயிரம்.
அப்படி என்றால் எமதர்மன் உங்களுக்கு இப்போது 39 வயசு என்றாரே.. நீங்க ஏன் எதிர்ப்பு தெரிவிக்கல என்று நிருபர் கேட்டார்.
உடனே கண்ணாயிரம் உங்களுக்கு ஏன் பொறாமை..என்னைப்பார்த்தா 39 வயசு இளமையானவரா எமதர்மன் நினைச்சிருக்கலாம். வயசை கூட்டிச் சொன்னா.. தட்டிக் கேட்டிருக்கலாம்.. குறைச்சு சொன்னா எப்படி குறை சொல்லமுடியும் என்றார்.
அதைக் கேட்ட நிருபர்.. நாங்க உங்களுக்கு என்ன வயசு போடுறது என்று கேட்க.. கண்ணாயிரம்..ம் 39 வயசுன்னு போட்டா என்ன குறைஞ்சா போயிடுவீங்க என்றார்.
நிருபரோ..இல்லை..வயசை மாத்திப்போட்டா சத்தம் போடுவீங்களே அதான் கேட்டேன் என்று சொல்ல கண்ணாயிரம் டென்சனாகி எனக்கு வயசே போட வேண்டாம் போங்க என்று கத்தினார்.
உடனே நிருபரும் புகைப்பட நிபுணரும் புறப்பட தயாராக.. கண்ணாயிரம் அடி ஆத்தி உட்காருங்க.. கலர் படம் எடுக்கணுமே.. இந்த கலாட்டாவில அதை மறந்திட்டேன் என்றவர்.
சாரி..உட்காருங்க..மேக்கப் போட்டுட்டு வர்றேன் என்றார்.
பெட்டை விட்டு இறங்கி சுடிதார் சுதாவின் மேக்கப் பாக்சை எடுத்துக்கொண்டு மறைவான இடத்துக்குப் போனார். முகத்தை நன்றாக கழுவினார். பின்னர் மேக்கப் பாக்சிலிருந்து அவசரமாக பவுடர் டப்பாவை எடுத்த போது நக பாலீஸ் பாட்டிலையும் சேர்த்து எடுக்க.. அது கைதவறி கீழே வீழ.. தரையெல்லாம் நகபாலீஸ் கொட்டியது. அய்யய்ய…ரத்தம் மாதிரியல்லா கிடக்கு என்ன செய்ய.. என்று நினைத்தவர் துடைத்துவிட்டு விடலாம் என்று கையால் தேய்க்க அது கையெல்லாம் ஒட்டிக்கொண்டது.. என்னடா வம்பா போச்சு.. போகமாட்டேங்குதே என்றபடி குழாய் தண்ணீரில் கழுவ முயன்றார்.
அப்போது கொசு ஒன்று பறந்துவிட்டது கன்னத்தில் கடிக்க.. கண்ணாயிரம் ஆவேசமாக.. இந்த கொசுவுக்கு நேரம் காலமே தெரியாது என்று கன்னத்தில் ஓங்கி அடித்தார். கொசு ஓடியது. ஆனால் கன்னத்தில் நகபாலீஸ் அப்பியிருந்தது. அதை அவர் கவனிக்கவில்லை. பவுடர் டப்பாவை எடுத்து உலுக்கினார். முகத்தில் பவுடர் பூசினார். கீழே விழுந்து கிடந்த நகபாலீஸ் பாட்டிலை எடுத்து மூடி மேக்கப் பாக்சில் வைத்தார்.
அப்போதும் அவர் கையில் நகபாலீஸ் ஒட்டியது. அவரோ..பவுடர் நல்லா ஒட்டியிருக்கா என்று கையால் தடவிப்பார்த்தார். அப்போது கன்னத்தில் நகபாலீஸ் ஒட்டி அது ரத்தக் காயம் போல் இருந்தது.
கண்ணாயிரம் மேக்கப் சரியாக இருக்கிறதா என்று பார்க்க மேக்கப் பாக்சில் இருந்து சின்ன கண்ணாடியை அவசரமாக எடுக்க அது தவறி விழுந்து கீறல் விழ.. கண்ணாயிரம் அதில் முகம் பார்க்க.. அவரது முகம் முழுமையாக தெரியவில்லை. என்னடா இது கண் தெரிஞ்சா.. காது தெரியமாட்டேங்குது. காது தெரிஞ்சா..கன்னம் தெரியமாட்டேங்குது என்று முணங்கியவர் எல்லாம் சரியா இருக்கும் என்றவாறு மேக்கப் பாக்சை தூக்கிக்கொண்டு பெட்டுக்குப் போனார்.
அவரைப் பார்த்ததும் புகைப்படக்காரர்..என்ன இது கோமாளி மாதிரி வேஷம் போட்டு வந்திருக்கிய..எப்படி படம் எடுக்கிறது என்று திணறினார்.
விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு நீங்க போராடுகிற மாதிரி போஸ் கொடுங்க என்று அவர் சொல்ல.. கண்ணாயிரம் பெட்டில் படுத்தபடி ஒரு காலை கயிற்றில் தொங்கவிட்டபடி ஆ..என்று வாயை பிளந்தபடி படுத்துகிடந்தார்.
புகைப்படக்காரர் பல கோணங்களில் படம் எடுத்தார். கண்ணாயிரம் அவரிடம் கலர் படம்தானே என்று கேட்டு உறுதிபடுத்திக்கொண்டார்.
கண்ணாயிரத்திடம் நிருபர்.. ஏங்க..நீங்க பஸ்சில தூங்கினதாலே உங்களுக்கு விபத்து நடந்தது தெரியல.
பஸ்கவிழ்ந்து உங்களை ஆம்புலன்சுக்கு தூக்கிச் சென்றது பெண்கள் வான் உலகிற்கு தூக்கிச்சென்றது போல் இருந்திருக்கு.. ஆம்புலன்சு விட்டு இறக்கி ஆஸ்பத்திரி பெட்டில் போட்டது வானத்திலிருந்து உருட்டிவிட்டது போல் இருந்திருக்கு.. அப்படித்தானே..பஸ் விபத்திலே நீங்க இலவசமா சொர்க்கத்தைப் பார்த்திட்டிங்க.. போன் நம்பர் வாங்கிட்டு வந்தியளா என்று கிண்டல் செய்தார்.
கண்ணாயிரம் சிரித்தபடி என் படம் எந்த எடிசனில் வரும் என்று கேட்டார்.முதல் எடிசன் இரண்டாம் எடிசன் இரண்டிலும் வரும் என்று நிருபர் சொல்ல கண்ணாயிரம்..ஏங்க முதல் எடிசன் இரண்டாம் எடிசன் எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்டார்.
அதுவா..பேப்பரில ஒரு ஸ்டார் போட்டிருந்தா முதல் எடிசன் இரண்டு ஸ்டார் போட்டிருந்தா இரண்டாவது எடிசன் என்று விளக்க.. உங்க பேப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்றது என்று சொல்லுங்க என்ற போது நர்ஸ் வேகமாக வந்து கூட்டம் போடாதீங்க.. போங்க
.போங்க.. என்று சத்தம் போட கூட்டம் கலைந்தது.
கண்ணாயிரம் அப்பாவி போல் பெட்டில் படுத்துக்கொண்டார். நர்ஸ் அவரைப் பார்த்து ஏங்க உங்களுக்கு உள்காயம் என்றுதான் அட்மிட்பண்ணியிருந்தாங்க..இப்போ என்ன கன்னதுதிலே காயம்.. கையிலே காயம் என்று கேட்க.. கண்ணாயிரம் நகபாலீஸ் என்று சொல்ல நர்ஸ் டென்சனில் கத்தினார். (தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.