போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய 4 வழி மேம்பாலம்
1 min read
New 4 lane flyover to reduce traffic congestion
2.2.2024
சென்னை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு பல்வேறு இடங்களில் புதிதாக மேம்பாலங்களை கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 5 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கமும் மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒருபுறம் மெட்ரோ ரெயில் விரிவாக்கப் பணிகள் நடந்து வந்தாலும்கூட நகரில் நெரிசல் குறைந்தபாடில்லை. கொருக்குப்பேட்டை ரெயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதேபோல வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலம் கட்டும் பணியும் தொடங்கி மெதுவாக நடக்கிறது.
இந்த மேம்பால பணியை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க 2,437 சதுர மீட்டர் தனியார் நிலத்தையும் 194 சதுர மீட்டர் அரசு நிலத்தையும் கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கணேசபுரம் ரெயில்வே மேம்பால பணி டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக விரைவில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ரூ.195.19 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைகிறது. இந்த பாலம் 570 மீட்டர் நீளம் கொண்டதாகும். 15 மீட்டர் அகலத்தில் கட்டப்பட உள்ளது.
மேம்பாலம் கட்டுவதற்கு தனியார் 30 பேரின் நிலம் தேவைப்படுகிறது. 2860 சதுரமீட்டர் அளவுள்ள தனியார் இடங்கள் கையகப் படுத்தப்பட வேண்டும். அரசு துறை நிலம் 8019 சதுர மீட்டர் நிலம் தேவைப்படுகி றது. மொத்தம் 10,879 சதுர மீட்டர் நிலம் இந்த திட்டத்திற்கு தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் சென்னை கலெக்டரால் நியமிக்கப்பட்டு நடக்கிறது.
நிலம் கையகப்படுத்தும் பணிக்காக பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும் நிலம் கையகப்படுத்தும் துறை அதிகாரிகள் மூலம் இவை நடத்தப்படும். நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் டெண்டர் கோரப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:- இந்த மேம்பாலம் கான் கிரீட் தூண்கள் மூலம் அமைத்தாலும் உத்திரங்கள் (கிரேடர்) இரும்பு ராடுகளை கொண்டு பயன்படுத்தப்படுகிறது. ரெயில்வே மேம்பாலங்களுக்கு இதுபோன்ற இரும்பு உத்திரங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கட்டுமான பணி காலம் குறையும்.
இந்த மேம்பாலம் 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப் பட்டதும் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.