ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது
1 min readThe Supreme Court dismissed the plea to open the Sterlite plant
29.2.2024
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனக்கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளதாவது, ”ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனக்கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆலையால் செய்யப்பட்ட விதிமீறல்கள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டது. ஆலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்புமீறல் இருந்ததாக கருதவில்லை. உயர்நீதிமன்ற முடிவில் தலையிட விரும்பவில்லை” எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது.
மு.க.ஸ்டாலின் கருத்து
தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான #Sterlite ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது!
எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.