முதல் மந்திரி பதவியிலிருந்து கெஜ்ரிவாலை நீக்கக்கோரிய மனுவை ஏற்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு
1 min read
Delhi High Court refuses to accept the petition seeking removal of Kejriwal from the post of Chief Minister
4.4.2024
டெல்லி மதுபானக் கொள்கை வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. விசாரணைக்குப் பின் ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடி அவர் தனது முதல்-மந்திரி பணிகளை கவனிக்கிறார்.
இந்த நிலையில், சிறையில் உள்ள கெஜ்ரிவாலை முதல் மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என விஷ்ணு குப்தா என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரனைக்கு வந்தது.
அப்போது கூறிய நீதிபதிகள், “சில நேரங்களில், தனிப்பட்ட நலன்கள் மற்றும் தேச நலனுக்கு அடிபணிய வேண்டும். நீதிமன்றம் சட்டத்தின்படிதான் செல்லவேண்டும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என தெரிவித்தனர்.
இதையடுத்து மனுதாரர் விஷ்ணு குப்தாவின் வழக்கறிஞர், மனுவை வாபஸ் பெறவிருப்பதாகவும், தனது மனுவுடன் துணைநிலை கவர்னரை அணுக உள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து, மனுவை வாபஸ் பெற மனுதாரருக்கு அனுமதி அளித்து மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோதும், நீர் ஆணையம் தொடர்புடைய உத்தரவு ஒன்றையும், அரசு மருத்துவமனைகள் மற்றும் மொகல்லா கிளினிக்குகள் பற்றிய 2-வது உத்தரவையும் கெஜ்ரிவால் பிறப்பித்து உள்ளார். இவற்றை நிறைவேற்றுவோம் என்று மந்திரிகளும் கூறியுள்ளனர். இந்த நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு திகார் சிறையில் இருந்தபடி, கெஜ்ரிவால் புது உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
இதுபற்றி அவருடைய மனைவி சுனிதா கெஜ்ரிவால் டிஜிட்டல் ஊடகம் வழியே கூறும்போது, கெஜ்ரிவால், சிறையில்தான் அடைப்பட்டு இருந்தபோதும், அவருடைய குடும்பத்தினரான டெல்லியின் 2 கோடி மக்கள் எந்தவித பிரச்சனைகளையும் எதிர்கொள்ள கூடாது என கூறியுள்ளார். அதனால் நாம் அலுவலக பணியுடன் சேர்த்து, அவற்றையும் தீர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார்.