June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் தேடிய லைலா/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Laila sought by Kannayiram/ comedy story / Tapasukumar

11.4.2024
கண்ணாயிரம் ஜவுளிக்கடைக்காரரிடம் வாங்கிய துணிகளுக்குரிய பணம் நாப்பதாயிரத்தைக் கொடுக்க முடியாமல் தவித்தார். ஜவுளிக்கடைக்காரர் அந்தத் தொகையைக் கேட்டதால் கண்ணாயிரம் சமாளிக்க முடியாமல் மயங்கி விழுந்தார்.
அவர் மயக்கம் தெளிந்தபோது ஜவுளிக்கடைக்காரரைப் பார்த்து கண்ணாயிரம் நீங்க யாரு என்று கேட்டதால் அவர் அலறி அடித்துக்கொண்டு ஓட.. இன்ஸ்பெக்டரையும் மோட்டார்சைக்கிள் வாலிபரையும் பார்த்து நீங்கள் ஓடவில்லையா என்று கேட்டதால் அவர்கள் எரிச்சலுடன் இருந்தனர்.
இதைப்பார்த்த பூங்கொடி.. சார் கோபப்படாதீங்க..சார் என்க..கண்ணாயிரம் பூங்கொடியைப் பார்த்து.. ஏம்மா எனக்காகப் பேசுறீங்க.. நீங்க யாரும்மா என்று கேட்க.. பூங்கொடி ஓ..என்று அழுதார்.
உடனே கண்ணாயிரம் ஏம்மா.. நீங்க யாருன்னுதானே கேட்டேன்.. உங்க வயசை கேட்கலையே.. ஏன் குலுங்கி குலுங்கி அழுறீங்க..என்று கேட்டார்.
இதைக் கேட்ட அருவாஅமாவாசை..டேய் பொறுமையைச் சோதிக்காதேடா.. இவா உன் பொண்டாட்டிடா.. என்று சொல்ல, கண்ணாயிரமோ..ம் பொண்டாட்டியா..எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலையே.. என்க.. அருவாஅமாவாசை மீசையை முறுக்கினார்.
டேய்..டேய்.. உன் பொண்டாட்டி வேற முழுகாம இருக்காடா..கல்யாணம் ஆகலன்னு சொல்லுறீயடா.. உனக்கு ஏழு கழுதை வயசாயிட்டுடா என்றார்.
கண்ணாயிரம் திடுக்கிட்டார். ஏழு கழுதை வயசுன்னா எவ்வளவு என்று கேட்க.. அருவாஅமாஅமாவாசை.. அதுவாடா.. ஏழேழு நாப்பத்தொன்பது என்று சொல்ல.. கண்ணாயிரம்..ம்.. எனக்கு வயசு இப்போ.. இருபது.. வாலிப வயசு என்றார்.
அய்யய்யோ.. இவருக்கு என்ன ஆச்சு.. எல்லாம் தப்பு தப்பா பேசுறாரு.. பஸ்சில உருண்டுவிழுந்த போது மூளை குழம்பிப் போச்சா.. தெரியலையே….என்க.. அருவாஅமாவாசை.. அழாதேம்மா.. அருவாளை எடுக்கக் கூடாதுன்னு நீ சத்தியம் வாங்கிட்ட.. இல்லைன்னா அவனை ஒருவழி பண்ணிடுவேன் என்று கத்தினார்.
அதற்கு பூங்கொடி..வேண்டாம்பா.. அவர் இருபதானாலும் என்கணவர் அறுபதானாலும் என் கணவர்.. நான் பாத்துக்கிறேன்.. நீங்க அவரை ஒண்ணும் பண்ணிடாதீங்க என்று கண்களை கசக்கினார்.
உடனே அருவாஅமாவாசை..நீ அழாதேம்மா.. நானும் அழுதிடுவேன்.. இந்தப் பயல நான் என்ன பண்ண என்று பற்களைக் கடித்தார்.
அப்போது இன்ஸ்பெக்டர் அவரிடம், ஒண்ணும் கவலைப்படாதீங்க.. நம்ம தெரு டாக்டருக்கிட்ட காட்டுங்க.. குணமாயிடும்..பிறகு வந்து பாக்கிறேன்.. என்றபடி கண்ணாயிரத்திடம்.. சரி நான் வரட்டுமா என்று சொல்ல.. கண்ணாயிரம்.. சரி ஏட்டைய்யா என்க.. ஏய் நான் இன்ஸ்பெக்டர்டா என்று சொன்னார்.
அதற்கு கண்ணாயிரம்.. எப்படி என்று கேட்க.. இன்ஸ்பெக்டர்.. இங்கே பாரு..என் சட்டையிலே மூணு ஸ்டார் இருக்கு.. அதனால நான்தான் இன்ஸ்பெக்டர் என்க.. கண்ணாயிரம் சிறிது யோசித்தார்… பின்னர்.. ஸார்.. வானத்திலே ஏராளமான ஸ்டார் இருக்கு.. அதனால வானத்தை ஐ.ஜி அப்படின்னு சொல்லலாமா என்றார்.
அவ்வளவுதான்.. இன்ஸ்பெக்டர்..அய்யய்யோ..நான் வர்ரேன்.. பிறகு வந்து பாக்கிறேன்.. சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போங்க என்றபடி இன்ஸ்பெக்டர்.. தொப்பியை மாட்டிக்கொண்டு வேகமாகப் புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் வாலிபரும்.. நானும் வர்ரேன் சார்.. இங்கே இருந்தா.. தலைசுத்திடும் என்றபடி பின்னால் ஓடினான்…கண்ணாயிரம் மெல்ல, ஏட்டையாக்கிட்ட ஒரு ஜோக் சொன்னேன்.. பதில் சொல்லாம ஓடிட்டாரே.. என்று கவலைப்பட்டார்.
பூங்கொடி மெல்ல வந்து கண்ணாயிரத்தைப் பார்த்து, ஏங்க உங்களுக்கு என்ன ஆச்சு.. என்றபடி கண்ணாயிரம் கையைத் தொட முயல, கண்ணாயிரம்.. அய்யய்யோ..தொடாதீங்க.. நான் கன்னி கழியாத கன்னிப் பையன்.. எனக்கு இன்னும் திருமணம் ஆகலை.. என்று சொல்ல பூங்கொடி ஓ..என்று அழுதார்.
அருவாஅமாவாசை.. அழாதேம்மா.. அவனுக்கு அருவா வைத்தியம் பண்ணுனாத்தான் சரிவரும் என்று மறைத்துவைத்த அருவாளை எடுக்க.. கண்ணாயிரம்.. ஏங்க நீங்க அருவா வியாபாரியா.. ஒரு அருவாளை மட்டும் சேம்பிளுக்கு காட்டுறீங்க.. நாலு அருவாளைக்காட்டினாத்தானே நல்லதா செலக்ட் பண்ண முடியும் என்று கடுப்பேத்த.. டேய்.. என்று அருவாஅமாவாசை அலறினார்.
பூங்கொடி. ஏப்பா.. நீங்க ஒரு ஆட்டோ பிடிச்சிட்டுவாங்க..அவரை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போவோம்.. என்க அருவாஅமாவாசை.. இதோ.. அழைச்சிட்டு வர்ரேம்மா என்றபடி வீதிக்கு ஓடினார்.
கண்ணாயிரம் பூங்கொடியைப் பார்த்து.. எங்க அம்மாவை எங்கே.. நீங்க யாரு என்று கேட்க, பூங்கொடி.. அம்மா.. வருவாங்க.. நான் உங்க அம்மாவுக்கு வேண்டியவள் என்று சொன்னார்.
கண்ணாயிரம் ஓ.. அப்போ அவங்க வந்தா நீங்க போயிடுவீங்களா.. உங்களுக்கு கல்யாணம் ஆயிட்டா என்று கேட்க, பூங்கொடி கழுத்தில் கிடந்த தாலியைக்காட்டி.. ஆயிட்டு என்று சொல்ல, கண்ணாயிரம்..ம் உங்களுக்கு ஆயிட்டு..எனக்கு இன்னும் திருமணம் ஆகல.. என்ன செய்ய.. என்று அப்பாவியாகக் கேட்டார்.
பூங்கொடி.. கடவுளே என்று கண்களை கசக்கினார்.
அப்போது ஆட்டோ.. வேகமாக அங்கு வந்து நின்றது.
பூங்கொடி கண்ணாயிரத்தைப் பார்த்து, வாங்க..ஆஸ்பத்திரிக்குப் போவோம் என்க.. கண்ணாயிரம் ஓ.. ஆஸ்பத்திரிக்கா.. லைலா இருக்குமே..அந்த ஆஸ்பத்திரிதானா.. என்று கேட்டார்.
பூங்கொடி..என்ன லைலாவா..யாரது என்று கேட்க,கண்ணாயிரம்.. ஓ உனக்கு தெரியாதா.. வெள்ளை டிரஸ் போட்டிருக்குமே..என்றார்.
பூங்கொடி..என்ன நர்சா.. இருப்பாங்க.. வாங்க போவோம் என்றரார்.
கண்ணாயிரம், அப்படியா.. நான் வர்ரேன் அவங்களப் பாக்கணும்.. பாத்து ரொம்ப நாளாச்சி என்றவாறு ஓடிவந்து ஆட்டோவில் ஏறினார்.
ஆட்டோவில் அருவாஅமாவாசை அமர்ந்திருந்தார். கண்ணாயிரம் அவரைப்பார்த்து என்னங்க அருவா விக்கப் போகலைய்யா.. ஆட்டோவில வந்து உட்கார்ந்திருக்கீங்க. .போங்க..போங்க.. நான் லைலாவைப் பாக்கப் போறேன்.. இறங்குங்க என்று கத்தினார்.
அருவாஅமாவாசை, டேய்,பேசாம வா..நறுக்கிடுவன் என்க.. பூங்கொடி..கதவைப் பூட்டிவிட்டு வேகமாக ஆட்டோவில் வந்து ஏறினார்.
கண்ணாயிரம் பூங்கொடி பக்கத்தில் அமர்ந்ததும்.. நான் கன்னி கழியாத கன்னிப் பையன்.. நான் முன்னே இருந்துக்கிடுறன்.. இந்த அருவாவியாபாரி வேற மிரட்டுறாரு.
நீங்க அருவா வேணுமுன்னு கேட்டீங்களா.. வாங்கிட்டு அனுப்பிவையுங்க.. என்று சொல்ல பூங்கொடி..அவரா.. ஆஸ்பத்திரி வரை வருவாரு.. அங்கே இறக்கிவிட்டுடுவோம்.. சரியா என்றார்.
கண்ணாயிரம் இறங்கி ஆட்டோவில் முன்னே போய் ஏறினார்.
ஆட்டோ..கட,கட என்று ஓடியது.
கண்ணாயிரம்..சீக்கிரம் போங்க.. லைலாவைப் பாக்கணும் என்க.. அருவாஅமாவாசை.. டேய்..அது யாருடா லைலா..என்று கேட்க, பூங்கொடி.. அமைதியா வாங்க, அங்கேப் போய் பாத்துக்கலாம் என்று சொல்ல, அருவாஅமாவாசை பற்களைக் கடித்தார். (தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.