தென்காசியில் கோடைவெயில் அதிகரிப்பு- கலெக்டர் எச்சரிக்கை
1 min readSummer Heat Increases in Tenkasi- Collector Alert
26.4.2024
தென்காசி மாவட்டத்தில் கோடை காலங்களில் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை இருந்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-
தென்காசி மாவட்டத்தில் தற்போது கோடைகாலமாக இருப்பதால் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை இருந்து வருகிறது. எனவே, பொதுமக்கள் கீழ்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தங்களை வெப்ப அலையிலிருந்து காத்துக்கொள்ள வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் தஏ.கே.கமல் கிஷோர கேட்டுக்கொண்டுள்ளார்.
கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புக்களை தடுக்க செய்ய வேண்டியவை
உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஒ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜீஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள். காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்த வரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும். அதிக உடல் வெப்பநிலையில் மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். குழப்பமான மனநிலையில் சோர்வாக உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
குறிப்பாக மதியம் 11.00 முதல் 3.30 மணி வரை தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். வெயில் காலங்களில் வெறுங்கால்களுடன் வெளியே செல்ல வேண்டாம். சிறிய குழந்தைகள் மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்க வேண்டும்.
எனவே கோடை காலங்களில் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலைகளால் ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளை தவிர்க்க கோடை காலம் முடியும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.