கண்ணாயிரம் சொன்ன காதல் கதை../ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
A love story told by Kannairam../ comedy story/ Tabasukumar
5.1.2024
கண்ணாயிரத்துக்கு பழைய நினைவுகள் மறந்துபோய் அவர் பிதற்ற ஆரம்பித்துவிட்டார்
இதனால் அவரை அவரது மனைவி பூங்கொடி அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று காட்டியபோது அவரது மூளையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். எனவே ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும் என்று டாக்டர் சொன்னார். ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது மூளை பகுதியே பதிவாகாமல் போனதால் மீண்டும் ஸ்கேன் எடுக்கவேண்டும் என்று டாக்டர் சொல்ல, கண்ணாயிரம் முதலில் இருந்தா.. என்று மனம் சோர்வடைந்தார்.
பூங்கொடி அவரை சமாதானப்படுத்தினார். மூளை இருக்கா இல்லையா என்று உறுதியாகத் தெரியவேண்டும் அல்லவா.. அதனால் இன்னொரு முறை ஸ்கேன் எடுங்க என்று சொல்ல, கண்ணாயிரம் ..ம்.. நீங்க சொல்லுறதாலப் போறேன்.. என்றபடி ஸ்கேன் எடுக்கும் அறைக்குச் சென்றார்.
ஊழியர் அவரிடம், வாங்க.. வாங்க.. சீக்கிரம் வாங்க.. என்று அவசரப்படுத்தினார்.
கண்ணாயிரம் அவரிடம்..யோவ், உனக்கு மூளையை ஸ்கேன் பண்ணி பழக்கம் இருக்கா என்று ஏற்கனவே கேட்டேன்..ம்.. அப்படின்னு சொல்லிட்டு ஏமாற்றிவிட்டாயா.. எனக்கு உடம்பெல்லாம் மூளை.. தலையில ஸ்கேன் எடுத்தா போதாது.. உடம்பு முழுவதும் எடு.. அப்படின்னு சொன்னேன்.. கேட்கமாட்டேன் என்று சொல்லிட்ட.. ஒரு மூளைக்கு ஒரு ஸ்கேன் பதம் என்று சொன்னே.. என்ன ஆச்சு.. மீண்டும் ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்குது..கொஞ்சம் மூளை வேணும்ப்பா என்று அடுக்கிக்கொண்டேப் போனார்.
ஊழியர் கோபத்தில்.. மூளையைப் பத்தியெல்லாம் உங்கிட்ட கேட்க வேண்டியது இருக்கு.. கரண்டு கட்டானதால் இந்த பிரச்சினை வந்துடுச்சு.. இப்பம் பாரு..உங்க மூளையை உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன் வாங்க என்றவாறு கண்ணாயிரத்தை ஸ்கேன் எடுக்கும் இடத்துக்கு அழைத்துச்சென்றார்.
கண்ணாயிரம்..ம்..வேலையை மூளையோடு செய்யணுமப்பா..கோபப்படக் கூடாது. கோபப்பட்டு வேற எதையும் எடுத்திடப் போற.. பாத்து என்றவாறு ஸ்கேன் எந்திரத்துக்குள் தலைப்பகுதியை நுழைத்தார்.
ஊழியர் தனது திறமையை யெல்லாம் பயன்படுத்தி, கண்ணாயிரம் தலைப் பகுதியை சுற்றி சுற்றி ஸ்கேன் எடுத்தார்.
கண்ணாயிர்ம் கண்களை விழித்துப் பார்த்தப்படி..சரியா ஸ்கேன் எடுக்கிறாரா என்று கண்ணாணித்தபடி படுத்திருந்தார்.
ஐந்து நிமிடம் கழித்து.. ஊழியர்.. மெல்ல.. ஏங்க ஸ்கேன் எடுத்தாச்சு.. போங்க.. என்க.. கண்ணாயிரம்.. ஏம்பா..சரியா செக்பண்ணிக்க.. தலையிலே மட்டும் தான் ஸ்கேன் பண்ணியிருக்க.. அங்க மட்டும்தான் மூளையிருக்கா.. எனக்கு உடம்பு முழுவதும் மூளையிருக்கப்பா.. அதிலே ஒண்ணு எடுத்துவச்சிக்க..பிறகு அது சரியில்ல.. இது சரியில்லை என்று சொல்லக்கூடாது என்றார்.
அதற்கு ஊழியர்..எல்லாம் சரியா இருக்கு.. டாக்டருக்கிட்ட போங்க என்க.. கண்ணாயிரம்..ம்..சரி என்றபடி டாக்டர் இருக்கும் அறைக்கு முன்னால் போய் அமர்ந்தார்.
பூங்கொடி..என்ன சீக்கிரம் வந்திட்டிங்க.. நல்லா ஸ்கேன் எடுத்தாங்களா.. இல்லை.. எழுந்து வந்திட்டியளா என்று கேட்க , கண்ணாயிரம்..ம் சரியா ஸ்கேன் எடுத்தியாப்பா என்று கேட்டேன்.. எல்லாம் சரியா இருக்குன்னு சொல்லிட்டான். என்றார்.
பூங்கொடி.. உடனே உங்களுக்கு எல்லாம் சரியா இருந்தா எந்தப் பிரச்சினையும் இல்லையே..என்க.. கண்ணாயிரம்.. நான் சொன்னா நம்பமாட்டிங்க..ஸ்கேன் சொன்னாதான் நம்புறீங்க.. எந்திரத்துக்கு இருக்கும் மரியாதை மனிதனுக்கு இல்லை.. என்ன செய்வது என்றார்.
பூங்கொடியும்..ம்..எதுக்கும் டாக்டர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம் என்க.. கண்ணாயிரம் ஆமா..அவர் என்னச் சொல்லப் போகிறாரோ என்று ஏக்கத்துடன் இருந்தார்.
அப்போது வெள்ளை நிற உடை அணிந்த நர்ஸ் வெளியே வந்து.. கண்ணாயிரம் யாரு.. டாக்டர் கூப்பிடுகிறார் என்று சொல்ல, கண்ணாயிரம்.. ஏங்க..நர்ஸ் லைலா எங்கே என்று கேட்டார்.
நர்ஸ் உடனே அவங்களை எனக்குத் தெரியாது.. டாக்டர் கூப்பிடுகிறார் வாங்க என்க.. கண்ணாயிரம்..இதோ வர்ரோம் .. லைலாவைப் பற்றி டாக்டரிடம் கேட்போம் என்றபடி டாக்டர் இருக்கும் அறைக் கதவைத் திறந்தார்.
டாக்டர்..வாங்க என்று அழைக்க கண்ணாயிரமும் பூங்கொடியும் டாக்டர் முன் சேரில் அமர்ந்தனர்.
டாக்டர் ஸ்கேன் பிரதியை.. எடுத்துப் பார்த்தார். கன்னத்தில் கைவைத்தபடி யோசித்தார். பூங்கொடி ..என்ன டாக்டர்.. ஸ்கேன் ரிப்போர்ட் என்ன சொல்லுது என்க.. டாக்டர்..ஆல்ரைட்.. மூளை இருக்கிறது உறுதியாயிட்டு என்று சொல்ல கண்ணாயிரம் நன்றி டாக்டர் என்றார்.
உடனே டாக்டர்.. அவசரப்படாதீங்க.. மூளைப் பகுதியில் சின்னகோடு தெரியுது என்றார்.
அதைக்கேட்டதும் கண்ணாயிரம் கோபத்துடன்..என்ன டாக்டர் .. அவர் சரியா எடுக்கல.. அதான் கோடு தெரியுது.. நாங்க வேற ஸ்கேன் ஸ்சென்டரில் எடுத்துப் பார்த்துக்கொள்கிறோம்.என்றார்.
பூங்கொடி அவரிடம்..ம் சத்தம் போடக்கூடாது என்க கண்ணாயிரம்..அப்புறம் என்னங்க முதலில் மூளைப்பகுதி பதிவாகவில்லை என்றாங்க.. இப்போ மூளை இருக்கு ஆனா சின்னக் கோடு இருக்கு என்கிறாங்க.. வேற ஸ்கேன் சென்டருக்குப் போவோம் என்றார்.
டாக்டர் மெல்ல, நீங்க எந்த ஸ்கேன் சென்டரில் எடுத்தாலும்..அந்த கோடு தெரியும். நீங்க விபத்தில் பஸ் உருண்டபோது.. தலையில் மைனர் காயம்.. ஏற்பட்டிருக்கு.என்க, கண்ணாயிரம்..என்ன டாக்டர் காயத்திலே மைனர், மேஜரா..என்று கேட்டார்.
டாக்டர் மெல்ல, மைல்டா..தலைப்பகுதியிலே பாதிப்பு ஏற்பட்டிருக்கு.. ஏதாவது ஒரு நெருக்கடி ஏற்பட்டா.. மயக்கம் ஏற்பட்டு நினைவுகள் மறந்திடும் என்றார்.
பூங்கொடியும் ஆமா டாக்டர்.. கட்டிய பொண்டாட்டி என்னையே மறந்திட்டாரு.. இளம் வயதில் என்னையே சுத்தி சுத்தி வந்தாரு.. கல்யாணம் பண்ணினா என்னத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்றார். எனக்கு மாமன் மகன் அவர் .எங்க அப்பா முதலில் வேண்டான்னு சொன்னாரு. ஆனா நான் இவரைத்தான் கட்டிக்குவேன் என்று ஒத்தக்காலில் நின்றதால் எங்க அப்பா எங்க திருமணத்துக்குச் கம்மதிச்சார். நான் எங்க அப்பாவுக்கு ஒரே மகள். அதனால, எங்க அப்பா எல்லா செலவும் எங்களுக்கு பண்ணிட்டுவாராங்க.. ஆனா அவரையே இவர் மறந்திட்டார்.. எங்க அப்பாவைப் பார்த்து இவர் யார் என்று கேட்கிறாரு டாக்டர் என்றார்.
டாக்டர்..ஓ..பழசை எல்லாம் மறந்திட்டாரா.. எதுவரைக்கும் மறந்திருக்கார் என்று தெரியவில்லையே என்க, அப்போது அழகிய லைலா..என்ற பாடல் காற்றில் கலந்துவர, கண்ணாயிரம் அந்த பாடலை கூர்ந்து கேட்டார்.
லைலா அவருக்கு நினைவுக்குவர, டாக்டர்.. டாக்டர்.. அந்த லைலா லைலா. அவங்க எங்க என்று கேட்டார்.
அதற்கு டாக்டர் ,நீங்க எந்த லைலாவைக் கேட்கிறீங்க என்க.. கண்ணாயிரம்.. அதான் டாக்டர்..வெள்ளை தேவதையா.. வருவாங்களே நர்ஸ் லைலா என்று சொன்னார்.
ஓ..அப்படியாரும் இப்போ இல்லையே என்று டாக்டர் சொல்ல, டாக்டர் இருக்கைக்குப் பின்னால் சுவரில் மாட்டியிருந்த போட்டோவைப் பார்த்த கண்ணாயிரம்.. அதில் சிரித்தபடி அழகாக சிவப்பாக நர்ஸ் உடையில் இருந்தவரைக் காட்டி.. டாக்டர்.. அதோ பாருங்க..போட்டோவில் லைலா..சிரிச்சிக்கிட்டு நிக்காங்க..என்றார்.
டாக்டரும் அந்தப் படத்தைப் பார்த்தவர், ஆமா..,இது முப்பது வருடத்துக்கு முன்பு ஆஸ்பத்திரி திறந்த போது எடுத்தப்படம்.. நான் ஆஸ்பத்திரிக்கு புதிசு . அதான் தெரியல..அப்போ இருந்த ஹெட் நர்ஸ் விமலாவை கேட்டாத் தெரியும். அவங்களை வரச் சொல்லுறேன் என்றார்.
சீக்கிரம் வரச்சொல்லுங்க டாக்டர் என்று கண்ணாயிரம் சொல்ல, ஒரு ஊழியர் சென்று ஹெட் நர்ஸ் விமலாவை அழைத்துவந்தார்.
அவர்கண்ணாடி போட்டு கொஞ்சம் தலை நரைத்தபடி இருந்தார். டாக்டர் கூப்பிட்டிங்களா என்றபடி வந்தவரிடம்.. ஆமா..ஆஸ்பத்திரி திறந்தபோது நீங்க நர்சா இருந்தீங்கல்லா.. அப்போ லைலான்னு ஒரு நர்ஸ் இருந்தாங்களா என்று கேட்டார்.
அதற்கு அவர்,ஆமா டாக்டர்.. லைலான்னு ஒரு நர்ஸ் இருந்தாங்க.. அவங்க கேரளா..சிவப்பா இருப்பாங்க.. சிரித்த முகத்துடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பாங்க.. அன்பா நடப்பாங்க.. அதனால லைலா நர்ஸ் இருக்காங்களா என்று எல்லோரும் கேட்பாங்க..அவங்க அவ்வளவு பேமஸ் என்றார்.
கண்ணாயிரம் உடனே,ஆமா..அவங்க ஊசி போட்டா வலிக்காது.. எனக்கு பல முறை ஊசிப் போட்டிருக்காங்க.. ஊசி போட்டாச்சின்னு அவங்க சொன்னாத்தான் நமக்கு ஊசி போட்டிருக்கின்னு தெரியும். ஆமா இப்போ அவங்கள எங்கே என்று கேட்டார்.
அதற்கு அவர்..அவங்க துபாயிக்குப் போயிட்டாங்க.. எப்போவாவது வருவாங்க என்று சொன்னார்.
அதற்கு கண்ணாயிரம் , நர்ஸ் லைலா இருப்பாங்கன்னுதான் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தேன்.. அவங்க இல்லையா.. அவங்க வந்தா நான் கேட்டதாகச் சொலுங்க என்றார்.
நர்ஸ் விமலா..சரி சொல்கிறேன் என்க.. டாக்டர் அவரிடம்.. சரி நீங்க போயிட்டுவாங்க என்று சொல்ல நர்ஸ் விமல அங்கிருந்து சென்றார்.
அப்போது டாக்டர் மெல்ல, நர்ஸ் லைலாவைத் தெரிகிறது. அவர் முப்பது வருஷத்துக்கு முன்னால இங்கே இருந்திருக்கார். கண்ணாயிரம் அப்போ அவரைப் பார்த்திருக்கார்..ம் அப்போது கண்ணாயிரத்துக்கு எத்தனை வயசு இருந்திருக்கும்.. என்று நினைத்த டாக்டர் , மெல்ல கண்ணாயிரத்தைப் பார்த்து உங்களுக்கு இப்போ வயசு என்ன என்று கேட்க, கண்ணாயிரம் அதுவா எனக்கு இப்போ வயசு இருபத்தியெட்டு என்றார். உடனே டாக்டர்.. ஓ..சரி.. நர்ஸ் லைலாவை எப்போ பாத்தீங்க என்க..கண்ணாயிரம்..அது இருபது வயசுல பாத்தேன் என்றார்.
டாக்டர்..ஓ..அப்படியா..உங்களுக்கு இப்போ இருபத்தியெட்டு வயசாச்சு என்கிறீங்க.. அப்படின்னா உங்களுக்கு எத்தனை வயசிலே கல்யாணம் ஆச்சு என்று கேட்டார். அதைக் கேட்ட கண்ணாயிரம்..என்ன டாக்டர் என்னைப் பார்த்தா கல்யாணம் ஆனவர் மாதிரியா தெரியுது..எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை டாக்டர் என்றார்.
டாக்டர் மெதுவாக அப்படியா.. ஏன் உங்களுக்கு கல்யாணம் ஆகலை என்று டாக்டர் கேட்க, கண்ணாயிரம் சோகமானார். டாக்டர்..நான் ஒரு பொண்ணை ரொம்ப நாளா லவ் பண்ணுனேன். அவளும் லவ் பண்ணுனா. அவளைக் கட்டிக்கணுமுன்னு நினைச்சேன். ஆனா எனக்கு சரியான வேலை இல்லைன்னு அந்தப் பெண்ணோட அப்பா எனக்கு திருமணம் செஞ்சிவைக்க மாட்டேங்கிறாரு..என்றார்.
அதைக்கேட்ட டாக்டர் ..ஓ..அப்படியா..அந்தப் பொண்ணு யாரு..என்க..கண்ணாயிரம்.. அது என் முறைப் பொண்ணுதான்..ஒல்லியா அழகா இருப்பா..என் பெயரைச் சுருக்கி கண்ணு கண்ணு என்பா.. அவா கொலுசு போட்டுக்கிட்டு மல்லிகைப் பூ வச்சிக்கிட்டு வளையல் குலுங்க வந்தான்னா.. என் மனசு அப்படியே வானில பறக்கும்.. அவளைக் காணம்.. தேடிக்கிட்டு இருக்கேன் என்றார்.
பூங்கொடி கண்களை கசக்கினார். டாக்டர் பரிதாபத்துடன் பார்க்க.. ஆமா..டாக்டர்.. நான் அப்போ..ரொம்ப ஒல்லியா இருப்பேன்..என்னை பூ..பூ என்று கூப்பிடுவாரு.. நாங்க கடற்கரைக்குப் போவோம்.. பூங்கா போவோம்.. அவரும் கறுப்பு என்றாலும் களையா இருப்பாரு..கரு கருன்னு முடி..சிவாஜி கணேசன் வசந்த மாளிகையிலே வர்ரமாதிரி முடியை வளைச்சுவுட்டுருப்பாரு.. ஒல்லியா இருந்த நான் உடம்பு உப்பி இப்படி ஆயிட்டேன்.. அவருக்கு என்ன அடையாளம் தெரியல என்றார்.
டாக்டர் மூக்கு கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு.. அதாவது அவருக்கு இருபது வயசிலிருந்து இருப்பத்தெட்டு வயசுவரைக்கும் நினைவிருக்கு. அவருக்கு எந்த வயசிலே கல்யாணம் ஆச்சு என்று கேட்க.. பூங்கொடி மெதுவாக.. இருபத்தி ஒன்பது என்று சொன்னார்.
டாக்டர் ..ஆ.. திருமணமே அவருக்கு நினைவில்லை. திருமணத்துக்கு முன்பு உள்ள காதல் நினைவிருக்கு.. அதைச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறார். அதனால..அவருக்கு மகிழ்ச்சி தரும் காதல் நினைவுகளை அதிகமாகச் சொல்லுங்க.. அதிர்ச்சி ஊட்டும் செய்தி எதுவும் சொல்லாதீங்க.. சரியா..நாளடைவில் பழைய நினைவு வந்திடும்.. எதுக்கும் மாத்திரைகள் கொடுக்கிறேன்.. நல்லா தூங்குவார் என்று சொன்னார்.
பூங்கொடி சரி..டாக்டர் என்றரர்.
பில்லுக்குரிய பணத்தைக்கட்டிவிட்டு மாத்திரைகள் வாங்கிக்கொண்டு கண்ணாயிரத்தைப் பார்த்து வாங்க வீட்டுக்குப் போவோம் என்றார்.
கண்ணாயிரம், நீங்க உங்க வீட்டுக்குப் போங்க.. நான் எங்க வீட்டுக்குப் போகிறேன் என்றார்.
பூங்கொடி..ஆ..என்று கத்தியது ஆஸ்பத்திரி முழுவதும் எதிரொலித்தது. (தொடரும்)
-வே.தபசுக்குமார்..புதுவை.