சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை
1 min readA student who suffered from caste violence scored 469, a record
6.5.2024
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற மகனும், சந்திரா என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் 2 பேரும் வள்ளியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தனர்.
பிளஸ்-2 படித்து வந்த சின்னத்துரைக்கும், நாங்குநேரியை சேர்ந்த மற்றொரு பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே சாதி ரீதியான மோதல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சின்னத்துரையை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். அதை தடுக்க வந்த அவரது தங்கை சந்திராவுக்கும் வெட்டு விழுந்தது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயம் அடைந்த மாணவன் சின்னத்துரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் பிளஸ்-2 காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை மருத்துவமனையில் இருந்தவாறு எழுதினார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவர் சின்னத்துரை 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:
தமிழ்-71, ஆங்கிலம்-93, பொருளாதாரம்-42, கணினி பயன்பாடு-94, கணக்குப்பதிவியல்-85, பொருளாதாரம்-82 என மொத்தம் 469 மதிப்பெண் பெற்றுள்ளார்.