நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; அரசு ஊழியர் கைது
1 min readWoman sexually harassed on Nilgiri Express train; Government servant arrested
9/5/2024
சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது கணவருடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்ல வேண்டி நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு எதிர் இருக்கையில் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அருள் நகரை சேர்ந்த ஜிம்ரிஸ் ராஜ்குமார் (45) என்பவரும் பயணம் செய்து கொண்டிருந்தார். இவர் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
அப்போது ஜிம்ரீஸ் ராஜ்குமார் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பெண் எச்சரிக்கை செய்ததை அடுத்து ஜிம்ரீஸ் ராஜ்குமார் தூங்க சென்று விட்டார். பின்னர் அந்த இளம் பெண்ணும் இரவு நேரம் ஆனதால் தூங்கிக் கொண்டிருந்தார். நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது மீண்டும் ஜிம்ரீஸ் ராஜ்குமார் அந்த இளம் பெண்ணுக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் எழுந்து ஜிம்ரீஸ் ராஜ்குமாரை மடக்கி பிடித்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக ரெயில் ஈரோடு வந்தடைந்ததும் நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் கணவருடன் சென்று ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். மற்ற பயணிகள் உதவியுடன் ஜிப்ரீஸ் ராஜ்குமார் ஈரோடு ரெயில் நிலைய போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிம்ரீஸ் ராஜ்குமாரை கைது செய்தனர்.
பின்னர் அவர் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.