கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
1 min read
Reactor 2 at Kudankulam Nuclear Power Plant restarts power generation
8.7.2024
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அணுமின் நிலையத்தில் 2 உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இவற்றின் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தொடர்ந்து அவ்வப்போது பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி 2-வது அணு உலையில் கடந்த மே மாதம் 13-ந்தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த பராமரிப்பு பணி முடிந்து இன்று காலை 5.05 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
தற்போது 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும், படிப்படியாக இன்று மாலைக்குள் மின் உற்பத்தி ஆயிரம் மெகாவாட்டை எட்டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் அணு உலையில் வழக்கம்போல் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அணுமின்நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுவதற்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.