தென்காசி கோட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி
1 min read
Tenkasi District Collector’s office confiscated
19.7.2024
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு ரூபாய் 44 லட்சம் இழப்பீடு வழங்காததால் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது யூசுப் மற்றும் 15 பேருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை கடையநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் கட்டுவதற்காக கடந்த 1987 ஆம் ஆண்டு அரசு மூலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் ஒரு சென்ட் நிலத்திற்கு ரூபாய் 100 வீதம் இழப்பீடு கொடுப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. அதற்கு நிலத்தின் உரிமையாளர்கள் சம்மதிக்காமல் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஒரு சென்ட் நிலத்திற்கு ரூபாய் 2300 வீதம் இழப்பீடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இது குறித்து அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டிலும் இதே தொகையை கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து நில உரிமையாளர்களுக்கு ரூபாய் 20 லட்சம் இழப்பீடாக கொடுக்கப்பட்டது.
மீதமுள்ள இழப்பீட்டுத் தொகை நீண்ட காலமாக உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை எனவே அவர்கள் தென்காசி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நில உரிமையாளர்களுக்கு தற்போது வரை வட்டியுடன் சேர்த்து ரூபாய் 44 லட்சத்து 15 ஆயிரத்து 704 ரூபாயை அரசு தரப்பில் இழப்பீடாக உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்பிறகும் நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்யுமாறு தென்காசி சார்பு நீதிமன்ற நீதிபதி கிரிஸ்டல் பபிதா கடந்த 20.06.2024 அன்று உத்தரவிட்டார். அந்த உத்தரவில் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சொந்தமான பொலிரோ கார், 10 கம்ப்யூட்டர்கள், 10 பீரோக்கள் 10 மின்விசிறிகள்,10 மரமேஜைகள், 10 மர நாற்காலிகள், டைப்ரைட்டிங் மிஷின்கள், ஆகியவற்றை ஜப்தி செய்து மனுதாரர்களிடம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி தென்காசி சார்பு நீதிமன்ற நீதிபதி அமீனா அகிலா மற்றும் வழக்கறிஞர்கள் நேற்று காலையில் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்கள் கடந்த 20.07.2024 அன்று தென்காசி சார்பு நீதிமன்ற உத்தரவுபடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜப்தி செய்யப் போவதாக கூறினார்கள்.
அப்போது அலுவலக ஊழியர்கள் கோட்டாட்சியர் தற்போது அலுவலகத்தில் இல்லை. சிறிது நேரத்தில் வந்து வடுவார்கள் என்று கூறினார்கள்.பின்னர் இதுகுறித்து கோட்டாட்சியர் லாவண்யாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அமீனா மின் இணைப்பை துண்டித்தார். அதனைத் தொடர்ந்து கணினி இணைப்புகளை துண்டித்து அதனை அங்கு வந்திருந்த நிலத்தின் உரிமையாளரிடம் கொடுத்தார்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே இரண்டு முறை நீதிமன்றம் ஜப்தி செய்ய உத்தரவிட்டது .அப்போது அப்போதயை கோட்டாட்சியர் அவகாசம் கேட்டதால் ஜப்தி நடவடிக்கையை நீதிபதி நிறுத்தி வைத்தார். ஆனால் அதன்பிறகும் நிலரிமையாளர்களுக்கு தொகை வழங்கப்படலில்லை. எனவே மூன்றாவது முறையாக ஜப்தி செய்ய வருகை தந்தனர். அவர்கள் திடீரென மின் இணைப்பை துண்டித்து கம்ப்யூட்டர்களை எடுத்தனர். இதனால்
பணியில் இருந்த கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவலறிந்த தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா உடனடியாக தென்காசி முதன்மை சார்பு நீதிமன்றத்திற்கு நேரில் சென்று நீதிபதியிடம் பணம் கொடுப்பதற்கு இன்னும் ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து நீதிபதி கிரிஸ்டல் பபிதா ஜப்தி நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அமீனா அகிலா மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு திரும்பி சென்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.