சங்கரன்கோவில் அருகே 1000 பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி
1 min read
1000 people participated in the marathon near Sankarankoil
27.8.2024
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள
பெரியசாமியாபுரத்தில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் சிறார்கள் கலந்து கொண்ட மாபெரும் மாரத்தான் போட்டி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் தமிழினியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காவல் துறையினரின் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியசாமி புரத்தில் உள்ள ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொத்தம் 25 பிரிவுகளாக மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஊத்துமலை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் மற்றும் சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணபதி செல்வம் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று கொண்ட மாணவ மாணவிகளுக்கு சாலை விழிப்புணர்வு, சைபர் குற்றங்கள், போஸ்கோ குறித்த விழிப்புணர்வுகள் செய்யப்பட்டது
அதனைத் தொடர்ந்து மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் தமிழினியன் மற்றும் ஊத்துமலை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் ஆகியோர் இந்த மாரத்தான் பந்தயத்தில் கலந்துகொண்டு ஓடியது மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.