வி.சி.க., நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம்: திருமாவளவன் அழைப்பு
1 min read
ADMK can also participate in anti-liquor conference organized by VC: Thirumavalavan invites
10.9.2024
கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2ம் தேதி மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் நடத்துகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. கட்சியின் முன்னணி நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் மாநாடு தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்நிலையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருமாவளவன் கூறியதாவது;
மதுவிலக்கை தேசியகொள்கையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன்வரும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி அளிக்க வேண்டும். மது ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரசாரத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.
தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். மது விற்பனை மூலம் வருவாயை அரசு பெருக்க நினைப்பது ஏற்புடையது அல்ல. மதுவிலக்கு அவசியம், அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஒரு திறந்தவெளி அறிவிப்பாக இந்த மாநாட்டை நடத்துகிறோம்.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் விரும்புகின்றன. அ.தி.மு.க.,வும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறது. வேண்டும் என்றால் நாங்கள் நடத்தும் இந்த மாநாட்டில் எங்களுடன் அ.தி.மு.க.,வும் சேர்ந்து மதுவிலக்கை வலியுறுத்தட்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.