அருணாச்சல பிரதேச சிகரத்திற்கு தலாய்லாமா பெயரிட்ட இந்திய குழுவினர்: சீனா எதிர்ப்பு
1 min read
Indian team names Arunachal Pradesh peak after Dalai Lama: Anti-China
27.9.2024
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு சீன வீரர்கள் அத்துமீறலை தொடர்ந்து இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் 20 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பதட்டம் நிலவியது. பின்னர் இருதரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து எல்லையில் சில பகுதிகளில் படைகள் திரும்ப பெறப்பட்டன.
இதற்கிடையே இந்தியா வில் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தின் எல்லை தொடர்பாகவும், இந்தியா-சீனா இடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திராங்கை தளமாக கொண்ட தேசிய மலை ஏறுதல் மற்றும் சாகச விளையாட்டு கழகத்தின் 15 பேர் கொண்ட குழு கடந்த சனிக்கிழமை அருணாச்சல பிரசேதத்தின் தபாங் பகுதியில் இதுவரை யாரும் ஏறாத சிகரத்தில் ஏறினர்.
மேலும் அந்த சிகரத்திற்கு 6-வது தலாய்லாமாவான சாங்யாங் கியாட்சோவின் நினைவாக ‘சாங்யாங் கியாட்சோ சிகரம்’ என்று பெயரிட்டது.
6-வது தலாய்லாமாவின் பெயரை தேர்ந்தெடுப்பது அவரது காலத்தால் அழியாத ஞானம் மற்றும் மோன்பா சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு ஒரு மரியாதை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளி யுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லின்ஜியான் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாங்யாங் பகுதி சீன பகுதியாகும். இந்திய குழுவினரின் நடவடிக்கை சட்ட விரோதமானது என்றார்.