நெல்லையில் பிரபல கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
1 min read
Bomb threat to popular eye hospital in Nellai
21/10/2024
நெல்லை சந்திப்பு பகுதியில் அரவிந்த தனியார் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மிகவும் பிரபலமான இம்மருத்துவமனையில் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு இலவசமாகவும், சலுகை விலையிலும் கண் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அதேபோல் வசதி படைத்தவர்களுக்கும் அவர்களின் வசதிக்கேற்ப நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இம்மருத்துவமனைக்கு மதுரை, கோயம்புத்தூர் என தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகள் உள்ளன. நெல்லை அரவிந்த் மருத்துவமனையில் பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் தினமும் அரவிந்த் கண் மருத்துவமனை பரபரப்புடன் இயங்கும்.
இந்நிலையில் இங்கு பணிபுரியும் செவிலியர் ஆறுமுகம் என்பவருக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் போன் செய்து உங்கள் மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் அது வெடித்து சிதறும் என செல்போனில் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் நெல்லை மாநகர காவல் துறை ஆணையரிடம் இது சம்பந்தமாக தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக திருநெல்வேலி டவுன் உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவமனையில் உள்ள கீழ்த்தளம் மற்றும் ஆறு தளங்களையும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயைக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் நேரடியாக சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு அறையிலும் சல்லடை போட்டு தேடுதல் நடத்தப்பட்டது. ஆனால் சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும் மிரட்டல் வெறும் புரளி என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செவிலியருக்கு போன் செய்த நம்பரை போலீசார் உடனடியாக சோதனை செய்தபோது அந்த நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அந்த நம்பர் யாருடைய நம்பர், எங்கே இருந்து அவர் பேசினார், பேசிய நபர் பெயர் என்ன மற்றும் பிற விவரங்கள் தொடர்பாக அதிகாரிகள் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணையில் இறங்கினர்.
அதில் செவிலியரை செல்போனில் தொடர்பு கொண்டவர் கோயம்புத்தூரை சேர்ந்த மகேஷ் என்ற நபர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் கோயம்புத்தூரில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் முன்னாள் கேன்டீன் ஊழியர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் மதுரை, கோயம்புத்தூரில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைகளிலும் வெடிகுண்டு இருப்பதாக மகேஷ் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. எனவே போலீசார் மகேஷை பிடித்து விசாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். நெல்லையில் நாள்தோறும் அதிக மக்கள் நெருக்கடியுடன் பரபரப்பாக இயங்கி வரும் பிரபல கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.