சேந்தமரம் அருகே தந்தைவெட்டிக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
1 min read
ife sentence for son who hacked father to death near Senthamaram
22.10.2024
தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி மனோஜ்குமார் தீர்ப்பு கூறினார்.
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகேயுள்ள வடநத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகையா. இவர் வீரசிகாமணி துணை மின் நிலையத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள். சண்முகையா தனது மனைவியுடன் அருணாசலபுரத்தில் குடியிருந்து வந்தார். சண்முகையாவிற்கும் வடநத்தம்பட்டியைச் சேர்ந்த காசியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டுஅவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. காசியம்மாளுக்கும் சண்முகையாவிற்கும் பிறந்த மகன் மூக்கையா (எ) டேவிட் என்பவர் தன்னை மகனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என சண்முகையாவிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.
மேலும் காசியம்மாள் தனக்கு ஜீவனாம்சம் சண்முகையா தரக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில்
மூக்கையா (எ) டேவிட்டை தனது மகனாக சண்முகையா ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார். கடந்த 1.1.2016 அன்று இரவு 8.30 மணி அளவில் சண்முகையா தனது மனைவி மாரியம்மாளுடன் வடநத்தம்பட்டிக்கு பைக்கில் சென்றுள்ளார். ஆப்போது அங்கிருந்த மூக்கையா (எ) டேவிட் அரிவாளுடன் வந்து எனது தாயாரை எப்படி தவறாக பேசலாம் என கூறி சண்முகையாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சண்முகையா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் பற்றி சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை கொலை செய்த மூக்கையா (எ) டேவிட் (வயது 24) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நீதிபதி மனோஜ்குமார் வழக்கை விசாரணை செய்து தந்தையை வெட்டி கொலை செய்த மூக்கையா (எ) டேவிட்டிற்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.2000ம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வேலுச்சாமி ஆஜரானார்.