மரக்காணத்தில் மழை வெள்ள பாதிப்புகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்
1 min read
MK Stalin inspects rain and flood damage in Marakkanam
2/12/2024
பெஞ்ஜல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. விழுப்புரம் பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.
மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியதோடு மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அவர் விழுப்புரம், மரக்காணம், திண்டிவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை பார்வையிட்ட அவர் அருகில் உள்ள சேவியர் காலனி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பிடாகம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். முன்னதாக மரக்காணம் மேட்டுத்தெருவில் தற்காலிக குடில் அமைத்து வசித்து வந்த 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்டி-சேலை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (திங்கட்கிழமை) விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தார். சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் மரக்காணம் ஒன்றியம் மந்தவாய்புதுக்குப்பத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் விழுப்புரம்-புதுவை சாலையில் உள்ள மகாராஜாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வி.வி.ஏ. திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.