திருவண்ணாமலை மண் சரிவில் இறந்தவர்களின் உடல்கள் மீட்பு
1 min read
Tiruvannamalai landslide: Bodies of deceased recovered
3.12.2024
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் அங்கு மூன்று இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. அதில் வ.உ.சி. நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி வீடு புதைந்ததில் அங்கு வசித்து வந்த 7 பேரில் 5 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில் 2 பேரின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த சூழலில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த மண் பரிசோதனை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன்படி மண்சரிவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து அந்த குழு சோதனை செய்து வருகிறது. இவர்களின் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கியவர்களில் மேலும் இரண்டு நபர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மண்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் தற்போது மீட்கப்பட்டுள்ளதக தகவல் வெளியாகி உள்ளது. 3-வது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து வந்த நிலையில் மேலும் இரண்டு பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக புதைந்த அந்த வீட்டுக்குள் ராஜ்குமார்(32), அவருடைய மனைவி மீனா (26), அவர்களின் மகன் கவுதம் (9), மகள் இனியா (7) மற்றும் ராஜ்குமார் உறவினர்களின் மகள்கள் மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகிய 7 பேர் சிக்கி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.