மும்பை படகு விபத்தில் 13 பேர் பலி-2 பேரை தேடுகிறார்கள்
1 min read
13 killed in Mumbai boat accident
19.12.2024
மும்பையில் நேற்று மாலை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து எலிபாண்டா தீவுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு நீல் கமல் என்ற பயணிகள் படகு சென்றது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கடற்படை படகு, பயணிகள் படகின் மீது மோதியது. இதில் இரு படகும் சேதமடைந்து மூழ்கின. படகுகளில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
இதையடுத்து கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் கடற்படை வீரர், கடற்படை ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 98 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் பலத்த காயமடைந்திருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 2 பயணிகளை காணவில்லை. அவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
கடற்படை ஹெலிகாப்டர், கடற்படை மற்றும் கடலோர காவல் படையின் 8 படகுகள் மூலம் இரண்டாவது நாளாக தேடும் பணி நடைபெறுகிறது.
காணாமல் போன பயணிகள் ஹன்ஸ்ராஜ் பதி (வயது 43) மற்றும் ஜோஹன் முகமது நிசார் அகமது பதான் (வயது 7) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.