ஜூலை மாதம் முதல் அரசியல் நடவடிக்கை; அண்ணாமலை தகவல்
1 min read
Political activities to begin in July; Annamalai shares details.
17.6.2026
ஜூலை மாதம் முதல் அரசியல் நடவடிக்கைகள் துவங்கப்போவதாக ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சமூக வலைதள நேரலையில் அவர் பேசியதாவது;-
நீங்கள் எல்லாம் சுயமாக வந்து பெரிய நம்பிக்கையோடு இந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளீர்கள். பெரிய மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு வந்துள்ளீர்கள். அதற்கு நான் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இயக்கத்தில் வந்து சேருமாறு நான் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. நான் முன்பு இருந்த கட்சியில் இருந்தும் யாரையும் அழைக்கவில்லை.
மக்களாக வந்து இணையும் போது, அவர்களாக வரட்டும். ஓடிபி (OTP) மூலம் உறுப்பினர் சேர்க்கை நடத்தும் இயக்கம் நாம் தான். நம்மைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவிக்கின்றனர். லட்சக்கணக்கானோர் அதை விரும்பவில்லை. சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அற்புதமான மனிதர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.
இப்போதைக்கு ‘வீ த லீடர்ஸ்’ ஒரு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. அரசியல் கட்சியாக மாறிய பிறகு, அதன் தன்மை தீவிரமாக இருக்கும். ஜூலை மாதம் முதல் மக்கள் பார்க்கத் தான் போகிறார்கள். பெரிய நம்பிக்கை, கனவோடு, நிச்சயம் இந்த இயக்கம் பொய்க்காது என்று வந்த நண்பர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு கிராமத்தில் வாழும் போது எவ்வளவு கஷ்டமான வாழ்க்கை என்பது சிறிய வயதில் இருந்தே அனுபவித்துள்ளேன். இந்த நிலைமை வேறு யாருக்கும் வந்து விடக் கூடாது. கிராமப்புறத்தில் ஒவ்வொரு பள்ளிகளாக மூடி வருகின்றனர். அப்படியானால் கிராமப்புறத்தில் இருக்கும் ஒரு குழந்தைக்கு கல்வி வாய்ப்பே இல்லை. நகர்ப்புறத்திற்கு எல்லாரும் நகர்ந்து விட்டது. வாழ்க்கை என்பது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்து தான் அரசியல் மற்றும் பொதுச்சேவைக்கு வர வைத்தது.
அரேபிய நாடுகளுக்கு இணையான வெயில் எங்களின் கிராமத்தில் நிலவுகிறது. இதனால், இந்தப் பகுதியில் விவசாயம் செய்ய முடியாது என்று உணர்ந்த என்னுடைய பெற்றோர், எப்படியாவது படித்து இந்த ஊரில் இருந்து தப்பித்து போய் விடு என்று சொன்னார்கள். ஆனால், எல்லா பக்கமும் சுத்தி அடித்து விட்டு, 2020ல் போலீஸ் பதவியை துறந்து விட்டு, இந்த ஊருக்கு தான் வந்தேன். விவசாயம் செய்ய வேண்டும் என்ற முடிவில் இங்கு வந்தேன். ஆனால், மண்ணின் தன்மை, மழையளவினால் நான் எதிர்பார்த்த விவசாயத்தை செய்ய முடியவில்லை.
தமிழகத்தில் 8.8 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்ய முடியும். ஆனால், செய்வதில்லை. கரூரில் மட்டுமே 1.8 லட்சம் நிலங்கள் உள்ளன. ஆனால், பண்ண முடியவில்லை. காரணம் வறட்சி, மண்ணின் தன்மை உள்ளிட்டவை தான். விவசாயப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவே கரூருக்கு வந்து ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பை தொடங்கினேன்.
இப்பகுதியில் வருமானம் கொழிக்கும் முருங்கை விவசாயம் மெல்ல மெல்ல அழிந்து போனது. எனவே, ஒரு 1000 முருங்கை விவசாயிகளை ஒருங்கிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கலாமா? என்று தான் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பை துவங்கினேன். அப்படி தான் கரூர் மாவட்டத்தை சுற்றி ‘வீ த லீடர்ஸ்’ அலுவலகங்களை அமைத்துள்ளேன்.
‘வீ த லீடர்ஸ்’ அமைப்பில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் தையல் பயிற்சி பெற்றனர். அனைத்து மதத்தினருக்கும் நாம் சமமாக இருப்போம். அவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கூட நான் பங்கேற்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் போட்டோவை வைத்து அந்த சகோதரிக்கு எந்த பாதிப்பும் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
தொடர்ந்து, அவரது தோட்டத்தில் இருக்கும் கால்நடைகள், மரங்கள் மற்றும் வசதிகள் குறித்தும் அவர் விளக்கமாக கூறினார்.